கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது

கோவில்பட்டி பாரதி நகர் பகுதியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் டிஎஸ்பி ஜெகநாதன் உத்தரவின் பேரில் கஞ்சா, போதைப் பொருள்கள் விற்பனை, கடத்தலை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று மேற்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் தனிப்படை போலீசார் பாரதிநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாரதி நகர் மேட்டு தெருவில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். தொடர்ந்து அவர்கள் கையில் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர். அதில் 1.100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அதை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கோவில்பட்டி வ.உ.சி. நகரை சேர்ந்த நிர்மல்குமார் மகன் சங்கரநாராயணன் (வயது 26), பாரதி நகரை சேர்ந்த சுரேஷ்குமார் மகன் கரண்குமார் (25) என்பதும், இந்த 2 பேரும் அப்பகுதியில் கஞ்சா விற்று வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த 2 பேரையும் கைது செய்தனர்.
Tags :