ஞானசேகரனுக்கு என்ன தண்டனை வழங்கப்படும்? மக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சென்னை அண்ணா பல்கலை. வளாகத்தில், கடந்தாண்டு டிசம்பர் 23ம் தேதி இரவு, அதே பல்கலைக்கழகத்தில் படித்து வந்த மாணவி, சக மாணவருடன் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நபர், இருவரையும் மிரட்டி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தார். இதனையடுத்து மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் (37) என்பவரை கைது செய்தனர். பல்கலைக்கழக வளாகத்திலேயே மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மூன்று பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடம்பெற்ற சிறப்பு குழு அமைக்கப்பட்டு விரிவான விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், திருட்டு, ஆள் கடத்தல், வீடு புகுந்து கொள்ளையடித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஞானசேகரன் ஈடுபட்டது தெரியவந்தது.
விசாரணையை முடித்த சிறப்பு புலனாய்வு குழு, ஞானசேகரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இறுதி வாதங்கள் நிறைவடைந்த நிலையில், கடந்த மே 28ம் தேதி போக்சோ சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பளித்தது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், ஞானசேகரன் குற்றவாளி என சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
குற்றவாளி ஞானசேகரனுக்கு இரக்கம் காட்டக் கூடாது என்றும், அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்ற வாதத்தை சென்னை மகளிர் நீதிமன்றத்தில் காவல்துறை முன்வைத்தது. ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், தண்டனை விவரங்கள் ஜூன் 2 ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி ராஜலெட்சுமி உத்தரவிட்டார்.
அதன்படி, இந்த வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு தண்டனை விவரங்கள் இன்று (ஜுன் 2) அறிவிக்கப்பட உள்ளன. இதன்காரணமாக, புழல் சிறையில் இருந்து ஞானசேகரன் பலத்த போலீஸ் காவலுடன் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகளிர் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட உள்ளார். ஞானசேகரனுக்கு என்ன தண்டனை வழங்கப்படும்? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.
Tags : ஞானசேகரனுக்கு என்ன தண்டனை