உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை முதல்வர் அறிவிப்பார்: அமைச்சர் கே.என்.நேரு

by Editor / 29-08-2021 01:01:27pm
உள்ளாட்சி தேர்தலுக்கான தேதியை  முதல்வர் அறிவிப்பார்: அமைச்சர் கே.என்.நேரு

   
 திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, ரூ.54.27 கோடி செலவில் குடிநீர் அபிவிருத்தி திட்டம் திருச்சி மாநகராட்சி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில், 103.425 கி.மீ நீளத்திற்கு குழாய்கள் அமைக்கப்பட உள்ளது. 4 இடங்களில் மேல்நில்நிலை நீர்தேக்கத் தொட்டியும், 2 இடங்களில் கீழ்நிலை நீர்தேக்கத் தொட்டியும் அமைக்கப்பட உள்ளது.
மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி நடைப்பெற்று வருகிறது.
திருச்சியில் சிந்தாமணி-மாம்பழச்சாலை இணைக்கும் காவேரி பாலம் வலுவிழந்து உள்ளது. அந்த பாலத்திற்கு அருகிலேயே ரூ.80 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிய காவேரி பாலம் கட்டப்படும்.
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 60 அடி அகலத்தில் திருச்சி நீதிமன்றம் முதல் அல்லித்துறை வரை சாலை விரிவாக்கமும் புதிய சாலைகள் அமைக்கப்படும். இதுபோல், உறையூர் முதல் வயலூர் வரை நேரடி சாலை அமைக்கப்படும்.

திருச்சியில் அமைய உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அருகில் மொத்த மற்றும் சில்லறை மார்கெட் அமைக்கப்படும்.திருச்சியில் செயல்படும் வேறு எந்த சந்தைகளும் இடமாற்றம் செய்யப்படாது. 
மாநகராட்சி விரிவாக்கத்தின் போது மாநகராட்சியோடு இணைக்கப்படும் கிராம பஞ்சாயத்துக்களின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்கள் பதவிக்காலம் முடியும் வரை அப்பதவிகளில் நீடிப்பார்கள். அவர்கள் அனைவரும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் நேரடி கண்காணிப்பில் செயல்படுவார்கள். மாநகராட்சியோடு இணைக்கப்படும் கிராம பஞ்சாயத்துக்கள் நீங்கலாக தேர்தல் நடத்தப்படும்.
மாநகராட்சி, நகராட்சி பகுதிகளின் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகள் நடைப்பெற்று வருகிறது.தேர்தலை எப்பொழுது நடத்தலாம் என ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.அந்த தேர்தலுக்கான தேதியை ஒரு சில நாள்களில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்றார்.
 

 

Tags :

Share via