டேவிஸ் கோப்பை: இரு ஒற்றையர் ஆட்டங்களிலும் இந்தியா தோல்வி

by Editor / 18-09-2021 12:12:34pm
டேவிஸ் கோப்பை: இரு ஒற்றையர் ஆட்டங்களிலும் இந்தியா தோல்வி

பின்லாந்துக்கு எதிரான டேவிஸ் கோப்பை உலகப் பிரிவு-1 சுற்றில் முதல் இரு ஒற்றையர் ஆட்டங்களிலும் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது.

ஆசிய ஓசேனியா மண்டலம்-1 பிரிவுக்குட்பட்ட இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டேவிஸ் கோப்பை ஆட்டம் கஜகஸ்தான் தலைநகர் நூர் சுல்தான் நகரில் 2019 டிசம்பர் மாதம் நடைபெற்றது. பாகிஸ்தானை 4-0 என்ற செட் கணக்கில் அபாரமாக வீழ்த்தி 2020 உலக தகுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா. உலகின் 2-ஆம் நிலை அணியான குரோஷியாவுடன் மோதியது. 2018-ல் டேவிஸ் கோப்பைப் பட்டத்தை வென்ற குரோஷியா அணி 3-1 என்கிற கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இதில் தோல்வியுற்ற இந்தியா, செப்டம்பர் 2020-ல் உலகப் பிரிவு-1 சுற்றில் பின்லாந்துக்கு எதிரான போட்டியில் பங்குபெறுவதாக இருந்தது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் பின்லாந்தில் உள்ள எஸ்பூவில் இந்தியா - பின்லாந்து இடையிலான உலகப் பிரிவு-1 சுற்று நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 3-6 6-7(1) என்ற நேர் செட்களில் ஒட்டோவிடம் தோல்வியடைந்தார். அடுத்த ஒற்றையர் ஆட்டத்தில் ராம்குமார் ராமநாதன், பின்லாந்தில் நெ. வீரரான எமிலிடம் 4-6 5-7 என்ற நெர் செட்களில் தோல்வியடைந்ததால் பின்லாந்து அணி 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.

 

Tags :

Share via