202 வாக்குறுதிகளை அரசின் அறிவிப்புகளாக  நிறைவேற்றியது மகிழ்ச்சி :முதல்வர் ஸ்டாலின் 

by Editor / 25-09-2021 05:21:50pm
 202 வாக்குறுதிகளை அரசின் அறிவிப்புகளாக  நிறைவேற்றியது மகிழ்ச்சி :முதல்வர் ஸ்டாலின் 



‘சொன்னதைச் செய்வோம் - செய்வதைத்தான் சொல்வோம்’ நாங்கள் உங்களுக்குக் கொடுத்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம் – சட்டமன்றத் தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின்  காணொளி காட்சி மூலம் மக்களுக்கு உரையாற்றியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்காணொளி காட்சியில் உரையாற்றியுள்ள விவரம் வருமாறு:
மக்களுக்கு ஏராளமான நன்மைகளைச் செய்வார்கள் என்று நம்பி நீங்கள் வாக்களித்திருக்கிறீர்கள்.
நீங்கள் எங்கள் மீது வைத்திருக்கிற நம்பிக்கையை நாங்கள் இம்மியளவும் பிசகாமல் காப்பாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதை நெஞ்சை நிமிர்த்தி என்னால் சொல்ல முடியும்.நாங்கள் உங்களுக்குக் கொடுத்த பெரும்பாலான வாக்குறுதிகளைக் காப்பாற்றி இருக்கிறோம்.அதனால்தான் உங்கள் முன்னால் தைரியமாகப் பேசுகிறேன்.சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டோம்.
ஆட்சிக்கு வந்து இன்றோடு 4 மாதங்கள்தான் கடந்துள்ளன.505 வாக்குறுதிகளைத் தந்தோம்.
அவற்றில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி விட்டோம்.இப்படி, தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.ஆளுநர் அறிக்கையில் 51 வாக்குறுதிகளும்;எனது பதிலில் 2 வாக்குறுதிகளும்;நிதிநிலை அறிக்கையில் 43 வாக்குறுதிகளும்;
வேளாண் நிதி நிலை அறிக்கையில் 23 வாக்குறுதிகளும்;அமைச்சர்கள் வெளியிட்ட அறிவிப்புகளில் 64 வாக்குறுதிகளும்;இதர அறிவிப்புகளில் 16 வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன.
மொத்தம் 202 வாக்குறுதிகள் அரசின் அறிவிப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன.தேர்தல் அறிக்கையில் சொல்லாத பல நல்ல செயல்களும் செய்யப்பட்டுள்ளன.
அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு அனைத்து தொழிற்கல்வி இடஒதுக்கீட்டுப் பிரிவுகளிலும், 7.5 விழுக்காடு இடங்கள் முன்னுரிமையின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்தல். இப்படி இடம்பெற்றவர்களுக்குக் கட்டணம் முழுமையாகச் செலுத்த வேண்டியது இல்லை.. இந்தியாவிலேயே முன்மாதிரித் திட்டமான ‘மக்களைத் தேடி மருத்துவம்’ தொடக்கம். தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்துச் சிறப்பிக்கும் வகையில், 5 இலட்சம் பரிசுத்தொகையுடன் கூடிய 'இலக்கிய மாமணி' விருது உருவாக்கம்இவை அனைத்துக்கும் மேலாக பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவித்து சமூகநீதி உறுதிமொழி ஏற்பு.
இவை எல்லாம் நாங்கள் அறிவிக்காதது. ஆனால் செய்து கொடுக்கப்பட்டவை.சொன்னதைச் செய்தவர்கள் மட்டுமல்ல -சொல்லாததையும் செய்து கொடுத்தவர்கள் நாங்கள்.505 வாக்குறுதிகளில் நான்கு மாதங்களுக்குள் 202 வாக்குறுதிகளை நிறைவேற்றிக் காட்டிய அரசு, இந்தியத் துணைக்கண்டத்திலேயே தி.மு.க. அரசாகத்தான் இருக்கும்.நிறைவேற்றிய வாக்குறுதிகளை நானே உங்களுக்கு பட்டியல் போட்டுக் காண்பிப்பேன்.இவ்வாறு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளியில் உரையாற்றியிருக்கிறார்.

 

Tags :

Share via