போலீஸார் செய்யும் கொடுமைகளை விசாரிக்க சிறப்புக் குழு: தலைமை நீதிபதி என்.வி.ரமணா

by Editor / 02-10-2021 10:42:35am
போலீஸார் செய்யும் கொடுமைகளை விசாரிக்க சிறப்புக் குழு: தலைமை நீதிபதி என்.வி.ரமணா

போலீஸார் மற்றும் அதிகாரிகள் செய்யும் கொடுமைகள் குறித்து சமானிய மக்கள் அளிக்கும் புகார்களை விசரிக்க உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்க ஆதரவாக இருப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்தார்.

சமீபத்தில் உத்தரப்பிரதேசம், கோரக்பூரில் ஒரு ஹோட்டலில் போலீஸார் சோதனைக்குச் சென்று அங்கு ஒரு வர்த்தகர் உயிரிழந்த சம்பவம், தமிழகத்தில் லாக்டவுன் காலத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் செல்போன் கடை வைத்திருந்த தந்தை மகனை அடித்துக் கொன்றதாக 9 போலீஸார் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவது ஆகியவற்றை சுட்டிக்காட்டி இந்த கருத்தை தலைமை நீதிபதி தெரிவித்தார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட, கூடுதல் டிஜிபி குர்ஜிந்தர் பால் சிங் தன்னை கைது செய்வதிலிருந்து பாதுகாப்பு அளிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். கூடுதல் டிஜிபி மீது தேசத்துரோக வழக்கு, குற்றச்சதி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

கூடுதல் டிஜிபி தாக்கல் செய்த மனு நேற்று உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டது. சத்தீஸ்கர் அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகல் ரோஹத்கி, ராகேஷ் திரிவேதியும், கூடுதல் டிஜிபிதரப்பில் விகாஸ் சிங், எப்எஸ் நாரிமனும் ஆஜராகினர். இந்த வழக்கில், தேசத்துரோக வழக்கிலிருந்து மட்டும் கூடுதல் டிஜிபியை கைது செய்ய தலைமை நீதிபதி விலக்கு அளித்தார்.அப்போது தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறுகையில் ' அதிகாரிகள் குறிப்பாக போலீஸார் செய்யும் கொடுமைகளை நினைத்து நாங்கள் மிகவும் வேதனையாக இருக்கிறோம். நாட்டில் அதிகாரிகள், குறிப்பாக போலீஸார் செய்யும் கொடுமைகள் குறித்து சாமானிய மக்கள் அளிக்கும் புகார்களை விசாரிக்க மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் தலைமையில் விசாரணைக் குழுஅமைக்க நான் ஆதரவாக இருந்தேன்.

சமீபத்தில் நீதிமன்றம் வழக்கு ஒன்றில் சுட்டிக்காட்டியது. அதாவது, ஒரு வழக்கில் ஒரு அரசாங்கத்திடம் இருந்து தண்டனை பெறாமல் தப்பிக்கும் போலீஸ் அதிகாரிகள் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது வட்டியுடன் திருப்பிச் செலுத்த நேரிடும். இதற்கு முந்தைய காலங்களில் எதிர்க்கட்சி ஆட்சிக்கு வரும்போது ஆளும்கட்சிக்கு ஆதரவாக இருந்த போலீஸ் அதிகாரிகள் பந்தாடப்படுவார்கள்.

இது வேதனைக்குரியதாகும். ஒரு அரசியல் கட்சிக்கு ஆட்சிக்குவரும்போது, போலீஸ் அதிகாரிகள் ஒரு கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்கள், அடுத்த தேர்தலில்புதிய கட்சி ஆட்சிக்கு வரும்போது, கடந்த ஆட்சிக்கு விஸ்வாசமாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த புதிய போக்குசெல்வது தடுத்து நிறுத்தப்படுவது அவசியம்'என வாய்மொழியாகக் குறிப்பிட்டார்

 

Tags :

Share via