சீன வீரர்கள் ஊடுருவலை  முறியடித்த இந்திய ராணுவத்தினர் 

by Editor / 08-10-2021 05:18:32pm
சீன வீரர்கள் ஊடுருவலை  முறியடித்த இந்திய ராணுவத்தினர் 

இந்திய எல்லைப்பகுதியில் சீன வீரர்கள் ஊடுருவ மேற்கொண்ட முயற்சியை இந்திய ராணுவத்தினர் முறியடித்தனர். 
இது தொடர்பாக பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகையில், 'இந்திய - சீன எல்லைப்பகுதியில் இருந்த ஆளில்லா பங்கர்களை சேதப்படுத்த முயன்ற சீன ராணுவ வீரர்களின் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்தது. சுமார் 200 சீன ராணுவ வீரர்களை தற்காலிகமாக சிறைப்பிடித்து வைத்தது. இதனால் ஏற்பட்ட மோதலை இரு தரப்பைச் சேர்ந்த அப்பகுதிகளின் கமாண்டர்கள் தலையிட்டு பிரச்னையை தீர்த்த பிறகு, வீரர்களுக்கு இடையிலான மோதல் நின்றது. ஆனால் இந்திய பாதுகாப்புப் படைக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை,' எனக் கூறியுள்ளனர்.


இந்திய - சீன எல்லைப்பகுதியில் சீன ராணுவத்தினர் அத்துமீறி உள்ளே நுழைவதை இந்திய ராணுவம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஆனாலும், சீன வீரர்களின் அத்துமீறல் சம்பவம் தொடர்ந்துக்கொண்டே இருக்கின்றன.


இந்திய - சீன படைகள் கடந்த ஆண்டு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் மோதலில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்தது. இதனால், அமைதியை ஏற்படுத்தும் வகையில் இருநாடுகளும் பல கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். 


இந்நிலையில், அருணாச்சலபிரதேச எல்லையில் இந்திய-சீன வீரர்கள் கடந்த வாரம் மோதலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் கடந்த வாரம் திபெத் தவாங் செக்டாரிலிருந்து அருணாச்சலப் பிரதேச எல்லைக்குள் 200 சீன ராணுவத்தினர் நுழைந்துள்ளனர். அவர்கள் அங்கு இருந்த சோதனைச் சாவடிகளை சேதப்படுத்த முயற்சித்து உள்ளனர். அப்போது, அங்கு விரைந்த இந்திய பாதுகாப்பு படையினர் சீன வீரர்களை தடுத்துள்ளனர். இதனால், இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சீன வீரர்கள் தங்கள் நாட்டின் எல்லைக்கே திரும்பி சென்றுள்ளனர். இந்த மோதலின் போது சீன வீரர்கள் சிலரை இந்திய படையினர் சிறைபிடித்தனர்.


இதனை தொடர்ந்து இரு நாட்டு படையினரின் உயர் அதிகாரிகள் மட்டத்திலான பேச்சு வார்த்தைக்கு பின்னர் சிறைபிடிக்கப்பட்ட சீன வீரர்களை இந்திய படையினர் விடுதலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மோதலின் போது சீன வீரர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவர்களை நமது இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தி தற்காலிகமாக சிறைப்பிடித்து வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளன.

 

Tags :

Share via