பிடிக்கப்பட்ட ஆட்கொல்லி புலிக்கு மைசூரு உயிரியல் பூங்காவில் சிகிச்சை

by Editor / 16-10-2021 03:27:41pm
பிடிக்கப்பட்ட ஆட்கொல்லி புலிக்கு மைசூரு உயிரியல் பூங்காவில் சிகிச்சை

 

கூடலூர் பகுதியில் 4 பேரை கொன்ற ஆட்கொல்லி புலியை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். புலிக்கு மைசூரு உயிரியல் பூங்காவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வனத்துறைச் செயலாளர் சுப்ரியா சாஹு தெரிவித்தார்.நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் மனிதர்கள் மற்றும் கால்நடைகளைத் தொடர்ந்து தாக்கிக் கொன்றது டி23புலி. இதையடுத்து இந்த ஆட்கொல்லி புலியை பிடிக்க வனத்துறையினர் கூண்டுகள் வைத்தனர். மேலும் அவர்கள், புலி நடமாட்டத்தை கண்காணிக்க மசினகுடி வனப்பகுதியில் 90 கேமராக்கள் பொருத்தி கண்காணித்து வந்தனர்.நேற்று மதியம் 2 மணியளவில் மசினகுடி சோதனைச்சாவடி அருகே வனப்பகுதியில் இருந்து எருமை மாடுகள் வேகமாக வெளியே ஓடி வந்தன. உடனே வனத்துறையினர் சென்று பார்த்தபோது புலி மாட்டை அடித்து தின்று கொண்டிருந்தது.

உடனே அந்த ஆட்கொல்லி புலியை பிடிக்க வனத்துறையினர் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தினர். இதனால் சிறிது நேரத்தில் அந்த புலி மயங்கி வனப்பகுதியில் விழுந்தது. இதைத்தொடர்ந்து வனத்துறையினர் புலியை பிடித்து இரும்பு கூண்டில் அடைத்தனர்.

22 நாட்களாக வனத்துறையினரின் தேடுதல் வேட்டைக்குப் பின் புலி பிடிப்பட்டுள்ளது. புலியைப் பிடித்தவுடன் அதை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்குக் கொண்டுசெல்ல முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால், புலியைத் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் அதற்கு உடலில் காயங்கள் இருப்பது தெரிய வந்ததால், மருத்துவக் குழு அறிவுறுத்தல்படி புலியை மைசூரில் உள்ள வன உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகள் மறுவாழ்வு மையத்துக்குக் கொண்டுசெல்ல அதிகாரிகள் முடிவு செய்தனர்.

வனத்தில் 22 நாட்களாக டி23 புலியைப் பின்தொடர்ந்து தேடுதல் நடத்தியதால், புலிக்கு மன அழுத்தம் ஏற்பட்டு இருந்தது. பிற புலிகளுடன் சண்டையிட்டதால் காயங்கள் ஏற்பட்டு இருந்ததாலும் புலியை வெகுதூரம் அழைத்துச் செல்ல முடியாது என்பதால் மைசூரு கொண்டு செல்லப்பட்டதாக வனத்துறைச் செயலாளர் சுப்ரியா சாஹு தெரிவித்தார்.

இந்நிலையில், தற்போது டி 23 புலி மைசூரு உயிரியில் பூங்காவில் உள்ள விலங்குகள் மறுவாழ்வு மையத்தில் உள்ளது. அதற்கு வனத்துறை கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அங்கு, முதல்கட்ட மருத்துவப் பரிசோதனையில் புலிக்கு 9 காயங்கள் உள்ளது கண்டறியப்பட்டது. அதில் 4 காயங்கள் பிற புலிகளுடன் ஏற்பட்ட சண்டையில் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஆனால், இந்தக் காயங்களால் புலியின் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும், வனத்துறை உயிர் அதிகாரிகள் புலியின் சிகிச்சையைக் கண்காணிக்க மைசூரு சென்றுள்ளனர்.

 

Tags :

Share via