ரூ.19 கோடி செலவில் நாட்டுக்கோழி இனப்பெருக்க வளாகம்; மீன்வளத்துறை கட்டிடங்கள்: ஸ்டாலின் திறந்து வைத்தார்

by Editor / 18-10-2021 03:39:06pm
ரூ.19 கோடி செலவில் நாட்டுக்கோழி இனப்பெருக்க வளாகம்; மீன்வளத்துறை கட்டிடங்கள்: ஸ்டாலின் திறந்து வைத்தார்

ரூ.19.05 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நாட்டுக்கோழி இனப்பெருக்க வளாகம், மீன்வளர்ப்பு தொழில் நுட்ப தொழில்சார் கல்வி நிலையக் கட்டடம் மற்றும் வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையக் கட்டடம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (18 ந் தேதி) தலைமைச் செயலகத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள மாவட்ட கால்நடைப் பண்ணையில் 6 கோடியே 74 லட்சத்து 87 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நாட்டுக்கோழி இனப்பெருக்க வளாகம், தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காட்டில் 8 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மீன்வளர்ப்பு தொழில்நுட்ப தொழில்சார் கல்வி நிலையக் கட்டடம் மற்றும் திருச்சி மாவட்டம், ஜீயபுரத்தில் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

நாட்டுக்கோழி வளர்ப்பை மக்களிடையே ஊக்குவிக்வும், நாட்டுக்கோழிக்குஞ்சு உற்பத்தியை அதிகரிக்கவும், கிராமப்புறங்களில் இத்தொழிலை ஊக்குவித்து தொழில் முனைவோரை உருவாக்கவும், நாட்டுக்கோழி வளர்ப்பு முறைகளில் நவீன செயல்பாடுகளை விவசாயிகளுக்கு எடுத்துச்சொல்லி அவர்களின் திறன் மேம்படும் வகையில் பயிற்சியளிக்கவும் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள மாவட்ட கால்நடைப் பண்ணையில் 6 கோடியே 74 லட்சத்து 87 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குஞ்சு பொரிப்பகத்துடன் கூடிய நாட்டுக்கோழி இனப்பெருக்க வளாகத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். இவ்வளாகத்தில் 5 ஆயிரத்து 100 வளரும் கோழிகள் மற்றும் 9 ஆயிரத்து 150 முட்டையிடும் கோழிகளை பராமரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இவ்வளாகத்தில் ஒவ்வொரு வாரமும் சுமார் 20 ஆயிரம் எண்ணிக்கையில் ஒருநாள் வயதுடைய நாட்டுக்கோழிக் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டு, வருடத்திற்கு சுமார் 10 லட்சம் கோழிக்குஞ்சுகள் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளதால் நாட்டுக்கோழிக்குஞ்சுகளின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.

கல்வி நிலைய கட்டிடம்

தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காட்டில் நபார்டு திட்ட நிதியில் 8 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மீன்வளர்ப்பு தொழில்நுட்ப தொழில்சார் கல்வி நிலையக் கட்டடத்தை முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார். இக்கல்வி நிலையத்தின் முக்கிய நோக்கம், மீன்வளர்ப்பு தொழில் நிறுவனத்துக்கு தேவையான இரண்டாம் நிலை தொழில்நுட்ப துணைத்தொழில் உதவியாளர்களை உருவாக்குவதாகும்.

இப்புதிய கட்டடம், தரை மற்றும் இரண்டு தளங்களுடன் 30 ஆயிரத்து 10 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தில் வகுப்பறைகள், கருத்தரங்கு அறை, ஆசிரியர்கள், பணியாளர் அறை, நூலகம், அருங்காட்சியகம், அலங்கார மீன் வளர்ப்பகம், மீன் உணவு தர பகுப்பாய்வு ஆய்வகம், நீர் தர பகுப்பாய்வு ஆய்வகம், நுண்ணுயிரியல் ஆய்வகம், மீன் நோய் கண்டறிதல் ஆய்வகம், இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் ஆய்வகம், தேர்வு அறை மற்றும் கணினி அறை ஆகியவை அமையப்பெற்றுள்ளது.

அலங்கார மீன்கள்

தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு இயக்ககத்தின் கீழ் திருச்சி மாவட்டம், ஜீயபுரத்தில் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையக் கட்டடத்தை முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.

இம்மையத்தின் முக்கிய நோக்கம், நன்னீர் அலங்கார மீன்களின் வளர்ப்பை பரவலாக்கும் நோக்கில், பல்வேறு விலை உயர்ந்த நன்னீர் அலங்கார மீன்களை வளர்க்கும் மீன் வளர்ப்பாளர்களுக்கு சிறந்த தரமான சினை மீன்களை உற்பத்தி செய்வதாகும். மேலும், நன்னீர் அலங்கார சினை மீன்களை தேர்ந்தெடுத்து உற்பத்தி செய்து அவற்றை மீன்குஞ்சு உற்பத்தியாளர்களுக்கு வழங்குவது மட்டுமின்றி அவர்களுக்கு பயிற்சியும் அளித்து தரமான மீன்குஞ்சுகளை உற்பத்தி செய்ய உதவும் பணியிலும் இம்மையத்தின் பேராசிரியர்களும் விரிவாக்கப் பணியாளர்களும் ஈடுபடுகிறார்கள்.

இம்மையக் கட்டடம் தரை மற்றும் முதல் தளத்துடன் 11 ஆயிரத்து 730 சதுர அடி பரப்பளவு கொண்டதாகும். இதில் நன்னீர் அலங்கார மீன்களுக்கான பொரிப்பகம், நாற்றங்கால் வளர்ப்பு வசதி, ஆய்வகங்கள், பயிற்சி அரங்குகள், கணிணி அறை மற்றும் நூலகம் ஆகியவை அமைந்துள்ளன.

மேலும், தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகத்தின் 2020 -21 ம் ஆண்டிற்கான இடைக்கால பங்கு ஈவுத்தொகையாக 1 கோடி ரூபாய்க்கான காசோலை மற்றும் 2020 -21 ம் ஆண்டிற்கான பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியிலிருந்து தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு செலுத்த வேண்டிய தொகையான 23 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை ஆகியவற்றை முதலமைச்சரிடம் இன்று மீன்வளம் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், மீன்வளம் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தெ.சு.ஜவஹர், மீனவர் நலத்துறை ஆணையர் கே.எஸ்.பழனிசாமி, கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநர் அ.ஞானசேகரன், தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஜி.சுகுமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via