கோவை மாநாட்டில் முதல்வர் முன்னிலையில் 34ஆயிரத்து 723 கோடியில் 52 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

by Editor / 23-11-2021 02:01:27pm
கோவை மாநாட்டில் முதல்வர் முன்னிலையில் 34ஆயிரத்து 723 கோடியில் 52 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

தமிழகத்தில் திமுக அரசு, ஆட்சிக்கு வந்தஉடனேயே  சென்னை கிண்டியில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியது. தொடர்ந்து 2-வதாக சென்னை கலைவாணர் அரங்கில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இவ்விரு மாநாடுகளிலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமாக ரூ.21 ஆயிரம் கோடிக்கும் அதிகமான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதன் தொடர்ச்சியாக  3-வது முதலீட்டாளர்கள் மாநாடு கோவையில் இன்று தொடங்கியது. கோவை கொடீசியா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தொழில் துறை கண்காட்சியை முதல்வர்  பார்வையிட்டார்.இதனைத்தொடர்ந்து  முதல்வர் தலைமையில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ரூ.34ஆயிரத்து 723 கோடியில் 52 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்த 52 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் வரவுள்ள திட்டங்களால் 74ஆயிரத்து 835 பேருக்கு நேரடியாகவும்,மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கரூர், தூத்துக்குடி, ராணிப்பேட்டையில் அல்ட்ரா டெக் நிறுவனம் சிமென்ட் உற்பத்தி ஆலைகளை அமைக்க உள்ளது. கோவை, செங்கல்பட்டு, விருதுநகரில் டால்மியா நிறுவனம், சிமென்ட் அரைத்தல் ஆலையை தொடங்க உள்ளது. கிருஷ்ணகிரியில் மின்சார  வாகனங்கள் உற்பத்தி ஆலையை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அமைக்க உள்ளது.

வான்வெளி மற்றும் பாதுகாப்புத்துறையின்  உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் திட்டங்களுக்கு ரூ. 485 கோடியில் 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. கோவையில் வான்வெளி மற்றும் பாதுகாப்பு உதிரி பாகங்கள் உற்பத்தி ஆலை அமைக்க ஒப்பந்தமாகியுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள வான்வெளி, பாதுகாப்பு சார்ந்த தொழில் நிறுவனங்களின் கையேட்டையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். வான்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில் துறைகளுக்கான உற்பத்தியை மேம்படுத்த திறன்மிகு மையமும் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து முதல்வர் தலைமையில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு  நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via