புதுவையில்15 மாதம் ரங்கசாமி முதல்வர்: 

by Editor / 04-05-2021 03:55:17pm
புதுவையில்15 மாதம் ரங்கசாமி முதல்வர்: 



நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 16, அதிமுக 5, பாஜக 9 தொகுதிகளில் போட்டியிட்டன. மே 2இல் வாக்கு எண்ணிக்கை முடிந்ததில் என்.ஆர்.காங்கிரஸ் 10, பாஜக 6 தொகுதிகளில் வெற்றிபெற்றன. அதிமுக தான் போட்டியிட்ட ஐந்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தது, காங்கிரஸ் கூட்டணியில் திமுக 6, காங்கிரஸ் 2 தொகுதிகளில் மட்டும் வெற்றிபெற்றன. மற்ற 6 தொகுதிகளில் சுயேச்சைகள் வெற்றி பெற்றனர்.
புதுச்சேரியில் பாஜக ஆட்சியை அமைக்க வேண்டும் என்று தேர்தல் முடிவுகளுக்கு முன்பே,தீவிரமான முயற்சியில் ஈடுபட்டுவந்தது பாஜக தலைமை. இதனால் மேலிடப் பொறுப்பாளர்களாக ஒரு மத்திய அமைச்சர், கர்நாடக எம்.எல்.ஏ,கள் மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகளை நியமித்திருந்தனர். 
வாக்கு எண்ணிக்கை முடிவுக்குப் பிறகு சுயேச்சை வேட்பாளர்களை தொடர்புகொண்டார்கள் பாஜகவினர். அதேபோல் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடமும் தொடர்பில் இருந்தார்கள்.இந்த விஷயம் தெரிந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைத் தொடர்புகொண்டு, “கூட்டணியில் எங்கள் கட்சிதான் அதிக இடங்களைப் பிடித்துள்ளது. அதனால் என்னை 15 மாதம் முதல்வராக அனுமதியுங்கள். அதன் பிறகு உங்கள் ஆட்சியை அமைத்து நமச்சிவாயம் முதல்வராக இருக்கட்டும். அதற்குப் பிறகு வேறு ஏதாவது மாநிலத்தில் எனக்கு கவர்னர் பதவி கொடுங்கள்” என்ற கோரிக்கையை வைத்துள்ளார்.
பேச்சு வார்த்தைகளுக்கு, பிறகு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த மத்திய அமைச்சர் அர்ச்சுன் ராம் மெக்வாலைத் தொடர்புகொண்ட அமித்ஷா, புதுச்சேரி அரசியல் சூழலைக் கேட்டறிந்தார். இதன்படி பாஜகவுக்கு ஒரு துணை முதல்வர், இரண்டு அமைச்சர், துணை சபாநாயகர், என்.ஆர் காங்கிரசுக்கு முதல்வர் பதவி, இரண்டு அமைச்சர், ஒரு சபாநாயகர் என இரு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
அதன்படி ரங்கசாமி முதல்வர், நமச்சிவாயம் துணை முதல்வர், பாஜகவைச் சேர்ந்த ஜான் குமாருக்கும் ஏம்பலாம் செல்வத்துக்கும் அமைச்சர் பதவிகள் எனவும்... என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜவேலுக்கும் தேனி ஜெயக்குமாருக்கும் அமைச்சர் பதவி எனவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via