துணி கடை ஊழியரை சரமாரியாக தாக்கிய 10 பேர் கொண்ட கும்பல்.

by Admin / 31-01-2022 11:33:40am
 துணி கடை ஊழியரை சரமாரியாக தாக்கிய 10 பேர் கொண்ட கும்பல்.

சென்னை வண்ணாரப்பேட்டை எம்.சி. ரோடு சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணிக்கடைகள் இயங்கி வருகின்றன. 

இங்கு வியாபார போட்டி அதிகமாக இருப்பதினால் வாடிக்கையாளர்களை அழைத்து செல்வதற்காக, இளைஞர்கள் பணியமர்த்தப்பட்டு அவர்களுக்கு நாளொன்றுக்கு 500 ரூபாய் ஊதியமாக வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் வண்ணாரப்பேட்டை ஜீன்ஸ் பார்க் கடைக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்களை, வலுக்கட்டாயமாக  அருகே இருக்கும் கடைகளுக்கு இளைஞர்கள் அழைத்து செல்வதாக ஜீன்ஸ் பார்க் கடை ஊழியர் ஆசிப் உரிமையாளர் தமிம் அன்சாரியிடம் தெரிவித்துள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் இருந்து வந்துள்ளது.

இதே நிலை தொடர்ந்ததால் இது குறித்து இளைஞர்கள் மீது ஜீன்ஸ் பார்க் உரிமையாளர் தமிம் அன்சாரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
 
அதனடிப்படையில் வண்ணாரபேட்டை போலீசார் இளைஞர்களான ரஞ்சித், திலக், பிரேம், ராஜா ஆகியோரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து எச்சரித்து எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனால் ஆத்திரத்தில் இருந்த அந்த இளைஞர்கள் நேற்று கடையின் உள்ளே 10க்கும் மேற்பட்டோர் புகுந்து ஊழியர் ஆசிப்பை சரமாரியாக தாக்கி உள்ளனர். 

இதில் பலத்த காயமடைந்த ஆசிப் மயக்கமடைந்தார். கடையின் உரிமையாளர் தமீம் அன்சாரி மயக்கமடைந்த ஆசிப்பை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். 

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via