ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்: கமல்ஹாசன்

by Editor / 26-05-2021 04:02:27pm
 ஆசிரியர் பாலியல் தொல்லை  கொடுத்த விவகாரம்: கமல்ஹாசன் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்... கமல்ஹாசன் பரபரப்பு அறிக்கை! ஆசிரியரே மாணவிகளிடம் அத்துமீறிய பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. முன்னரே புகார் அளித்தும் பள்ளி இவ்விவகாரத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை எனும் குற்றச்சாட்டு நமது கல்வி நிறுவனங்களின் மீதான நம்பிக்கையை குறைக்கிறது. தமிழக அரசு இந்த விவகாரத்தில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். வழக்கு விசாரணைக்கு பள்ளி நிர்வாகமும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். இந்த விவகாரம் வெடித்ததை அடுத்து வேறு சில பள்ளிகளில் நிகழ்ந்த நிகழும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன. தமிழக அரசு உடனடியாக பிரத்தியேக விசாரணைக் குழுவினை அமைத்து இந்த குற்றச்சாட்டுகளை போர்க்கால அவசரத்தில் விசாரிக்க வேண்டும். இரண்டு பெண் பிள்ளைகளின் தகப்பனாக குழந்தைகளின் பாதுகாப்பை பற்றி எனது பதட்டமே 27 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த மகாநதி. இன்றும் அந்தப் பதட்டம் குறைந்தபாடில்லை. கண்ணை இமை காப்பது போல நாம் நம் கண்மணிகளை காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கிறோம். ஆன்லைன் வகுப்பு போன்ற இணைய வசதிகளை நம் பிள்ளைகள் கையாளும் போது பெற்றோர் மிகுந்த கவனத்துடன் சரிபார்க்க வேண்டும். பிள்ளைகள் சொல்லும் பிரச்சனைகளுக்கு காது கொடுக்க வேண்டும். அவர்களது அச்சத்தை போக்கி அவர்களுக்கு துணையாக இருக்க வேண்டும். இந்தப் பிரச்னையை குறுகிய கால அரசியல் ஆதாயத்திற்காக சாதிப் பிரச்னையாக திருப்பும் முயற்சி பல தரப்பிலும் நிகழ்வதை காண்கிறேன். குற்றத்தை பேசாமல் குற்றத்தின் தீவிரத்தை பேசாமல் பிரச்னையை மடைமாற்றினால் அது பெரும்பாலும் குற்றவாளிகளுக்கு சாதகமாக முடிந்து விடும் அபாயம் இருக்கிறது. குற்றமிழைத்தவர்கள் எந்த சாதியினர் ஆயினும் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். ஓர் அறிவு சமூகமாக நாம் அனைவருமே போராடி நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
 

Tags :

Share via