14 வயது சிறுவன்; குகை வீடு கட்டிய வினோதம்!

by Editor / 02-06-2021 11:28:35am
14 வயது சிறுவன்; குகை வீடு கட்டிய வினோதம்!

பெற்றோருடன் ஒரு சின்ன வாக்குவாதம். இதனால் கோபமுற்ற 14 வயது ஆண்ட்ரஸ் கான்டோ தாத்தாவின் கோடரியை எடுத்துக்கொண்டு தோட்டத்துக்குச் செல்கிறார். அங்கே, கோடரியால் ஓரிடத்தில் ஆழமாக குழி தோண்டுகிறார். 6 ஆண்டுகளாக தொடர்ந்து குழி தோண்ட இன்று அந்த இடம் ஒரு குகையாக மாறியிருக்கிறது.

ஆண்ட்ரஸ் கான்டோ (20), இப்போது ஒரு புகழ்பெற்ற வளரும் நடிகர். இவர் அண்மையில் இன்ஸைடர் பத்திரிகைக்கு அளித்தப் பேட்டியில் தனது குகைவீடு பற்றி சொல்லியிருக்கிறார். அந்த குகைவீட்டின் புகைப்படங்களையும் ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார். இப்போது இச்செய்தி இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.


 

ஆண்ட்ரஸ் பேட்டியிலிருந்து..

அப்போது எனக்கு 14 வயது. விடுமுறை நாளான அன்று நான் எனது நண்பர்களுடன் விளையாடச் செல்ல ஆயத்தமானேன். அப்போது என் அம்மாவும், அப்பாவும் வேறு உடை மாற்றிச் செல்லுமாறு கூறினார். இதன் மீது அம்மாவிடம் நான் வாக்குவாதம் செய்தேன். எனக்கு கோபம் வந்தது. அதிலிருந்து விடுபட தாத்தாவின் கோடரியை எடுத்துக்கொண்டு புழக்கடைக்குச் சென்றேன். அங்கே தோட்டத்தில் ஓரிடத்தைத் தேர்வு செய்து ஒரு குழி தோண்டினே. பின்னர் அதை அப்படியே விட்டுச் சென்றுவிட்டேன். ஆனால், மறுநாளும் அந்த இடத்துக்குச் சென்றேன். தொடர்ச்சியாக அங்கே குழி தோண்டிக் கொண்டே இருந்தேன். 6 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது அது மனிதன் வாழும் குகையாக மாறிவிட்டது. அதில் எல்லா வசதிகளையும் செய்துகொண்டிருக்கிறேன். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நான் கடந்த 2017 வரை என்னால் அந்தக் குழியை எவ்வளவு ஆழமாகத் தோண்ட முடிகிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் முனைப்பிலேயே தோண்டினேன்.

ஆனால், அதன்பின்னர்தான் ஏன் அந்த இடத்தை வசிக்கும் வகையில் ஒரு குகையாக மாற்றக் கூடாது எனத் தோன்றியது. இப்போதெல்லாம் எனது நண்பர்களும் என்னுடன் இணைந்து அங்கு குழி தோண்ட உதவுகின்றனர். குறிப்பாக ஆண்ட்ரூ நிறையவே உதவுகிறார். தினமும் மூண்று மணி நேரமாவது எனது குகையை செப்பணிடும் பணியில் ஈடுபடுகிறேன். இதுவரை இந்த குகைக்காக 43 யூரோக்கள் செலவழித்திருக்கிறேன். இப்போது உள்ளே ஒரு நாற்காலி போட்டுள்ளேன். அதுதவிர வைஃபை வசதி இருக்கிறது. மியூசிக் சிஸ்டம் வைத்துள்ளேன்.

கடும் கோடைக்காலத்தில் இந்தக் குகைக்குள் வெறும் 20 முதல் 21 டிகிரிதான் வெப்பநிலை இருக்கிறது. மழைக்காலத்தில் இங்கே தண்ணீர் நிரம்பிவிடும். அப்புறம் அதை வெளியேற்றுவேன். மழைக்காலங்களில் பூச்சிகளும், நத்தைகளும் அழையா விருந்தாளிகளாக வருவார்கள். ஒருமுறை, இந்தக் குகையை ஆய்வு செய்ய அதிகாரிகள் வந்தனர். இது வீட்டின் பேஸ்மென்ட் இல்லை என்பதால் இதில் சட்டபூர்வமாக எவ்வித சிக்கலும் இல்லை எனக் கூறிச் சென்றனர். இவ்வாறு ஆண்ட்ரஸ் கான்டோ கூறினார். குகைக்குள் ஒரு குளியல் டப் அமைப்பதே ஆண்ட்ரஸின் அடுத்த இலக்காக இருக்கிறது. தனது மகனின் கோபத்தால் உருவான குகையைக் கண்டு ஆண்ட்ரஸின் பெற்றோர் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

 

Tags :

Share via