3 நாட்கள் அடைத்து வைத்து பலாத்காரம்; சிறுமியை பெல்ட்டால் தாக்கிய போலீசார்

by Editor / 09-09-2022 12:20:56pm
3 நாட்கள் அடைத்து வைத்து பலாத்காரம்; சிறுமியை பெல்ட்டால் தாக்கிய போலீசார்

பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 13 வயது பட்டியலின சிறுமி, இரவு முழுவதும் காவல்நிலையத்தில் கொடூரமாக தாக்கப்பட்டதாக புகார் அளித்தார்.மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதால், 3 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் ஆகஸ்ட் 30ஆம் தேதி நடந்துள்ளது.கடந்த ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி விளையாடச் சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை என சிறுமியின் தாய் தெரிவித்துள்ளார். பின்னர், சிறுமியின் தந்தை கோட்வாலி காவல் நிலையத்திற்குச் சென்று, தனது மகளைக் காணவில்லை என்று புகார் அளித்தார். இதையடுத்து, ஆகஸ்ட் 30ஆம் தேதி வீடு திரும்பிய சிறுமி, பாபு கான் என்பவர் தன்னை வலுக்கட்டாயமாக தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று மூன்று நாட்கள் பாலியல் பலாத்காரம் செய்ததாக பெற்றோரிடம் தெரிவித்தார்.பாலியல் பலாத்கார புகார் அளிக்கச் சென்ற தனது மகளை ஸ்டேஷனில் போலீசார் எட்டி உதைத்து பெல்ட்டால் அடித்ததாக சிறுமியின் தாய் குற்றம் சாட்டினார். மேலும், இரண்டு போலீஸ்காரர்கள் தனது மகளுக்கு தனது வாக்குமூலத்தை மாற்றுமாறு அழுத்தம் கொடுத்ததாகவும் அவர் கூறினார். அதே நேரத்தில், பலாத்கார குற்றவாளி பாபு கான் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம், பட்டியலிடப்பட்ட சாதிகள், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.கோட்வாலி எஸ்எச்ஓ அனூப் யாதவ், சப்-இன்ஸ்பெக்டர் மோகினி சர்மா மற்றும் உதவி சப்-இன்ஸ்பெக்டர் குர்தத் சேஷா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக சத்தர்பூர் எஸ்பி சச்சின் சர்மா தெரிவித்தார். மாவட்ட குழந்தைகள் நலக் குழு அளித்த புகாரின் பேரில் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

 

Tags :

Share via