பள்ளியில் மதமாற்றம் புகார் – தமிழ்நாடு அரசு மறுப்பு
சென்னை ராயப்பேட்டையில் உள்ள சிஎஸ்ஐ மோகனன் பள்ளி விடுதியில் மாணவர்கள் கிருத்துவ மதத்தை பின்பற்ற வலியுறுத்தப்படுவதாக மாநில குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் ஆணையத்தினர் ஆய்வு செய்ததில் தெரியவந்ததாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் நல ஆணையம் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மற்றும் காவல் துறை இயக்குனருக்கு கடிதம் எழுதியிருந்தது
கடிதத்தில் மாணவர்களை விடுதியிலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் விடுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதில், பள்ளியில் மதமாற்றத்திற்கு மாணவர்கள் வற்புறுத்தப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. மாணவியர்கள் விடுதியில் சில குறைபாடுகள் மட்டுமே உள்ளதாகவும், மதமாற்றம் நடைபெறவில்லை என்றும் தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே, சிஎஸ்ஐ பள்ளி விடுதிகளின் வாரிய இயக்குநர் சாமுவேல் பேசும்போது, குற்றம்சாட்டப்பட்டுள்ள விடுதி 100 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வருவதாகவும், இது தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ள புகாருக்கு கீழ் வராது என்றும் கூறினார். மேலும், அவர்கள் எடுத்த அறிக்கையை தங்களிடம் தரவில்லை என்றும், நேரடியாக அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர் என்றும் விளக்கமளித்தார். மேலும் சிஎஸ்ஐ மோகனன் விடுதியில் எந்த மாணவிகளும் மதமாற்றத்திற்கு உட்படவில்லை என்றும் கூறினார்.
Tags :