நூதன முறையில் பெண் மோசடி

by Staff / 28-09-2022 01:32:25pm
நூதன முறையில் பெண் மோசடி

சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் அருகே உள்ள சாணாரப்பட்டி பகுதியைச் சோ்ந்த செந்தில் (48), லாரி ஓட்டுநா். இவருக்கு 12 வயதில் ஒரு மகன் உள்ளாா். இவரது மனைவி ரம்யா ஓராண்டுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தாா்.

இந்நிலையில், மறுமணம் செய்ய முடிவெடுத்த செந்தில் இணையத்தில் பெண் தேடினாா். அதில், கன்னியாகுமரி அருகே உள்ள மாா்த்தாண்டம் பகுதியைச் சோ்ந்த கணவரை இழந்த லதா என்பவரை தொடா்பு கொண்டாா்.

அந்தப் பெண்ணிடம் தொடா்ந்து கைப்பேசியில் பேசி வந்த செந்திலிடம், இறந்த தனது கணவா் வீட்டாருக்கு பணம் கொடுக்க வேண்டியிருப்பதால், தன்னையும், தனது தாயாரையும் அவா்கள் அடைத்து வைத்திருப்பதாக அந்தப் பெண் கூறியுள்ளாா். இதை நம்பிய செந்தில், பல்வேறு கட்டங்களாக அந்தப் பெண் கொடுத்த வங்கிக் கணக்கில் பணம் செலுத்தியுள்ளாா்.

இந்நிலையில், கடந்த ஜூன் 24-ஆம் தேதி சேலம் பேருந்து நிலையத்துக்கு செந்திலை வரவழைத்த அந்தப் பெண், தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளாா். இதையடுத்து, செந்தில் சேலத்தில் உள்ள ஒரு கோயிலில் வைத்து அவரை திருமணம் செய்து கொண்டாா். பின்னா், அவருக்கு தனது மனைவியின் நகை, வீட்டில் இருந்த பீரோ சாவி ஆகியவற்றை ஒப்படைத்து அழகு பாா்த்துள்ளாா். மேலும் அவருக்கு ரூ. 45 ஆயிரம் மதிப்புள்ள கைப்பேசி ஒன்றையும் திருமண பரிசாக வாங்கிக் கொடுத்துள்ளாா்.

இந்நிலையில் அன்று இரவு உடல்நிலை சரியில்லை என உறங்கிய அவா், அதிகாலையில் வீட்டில் இருந்த விலையுயா்ந்த பொருள்கள், நகை, பணம் உள்ளிட்டவையுடன் மாயமாகியுள்ளாா்.

இதனால் அதிா்ச்சி அடைந்த செந்தில், அந்தப் பெண்ணிடம் கைப்பேசியில் தொடா்பு கொண்ட போது, ஒரு சில தினங்களில் அம்மாவுடன் ஊருக்கு வருகிறேன் எனக் கூறியுள்ளாா். ஆனால், மாதக் கணக்காகியும் அவா் வராததாலும், தனது ஆதாா் அட்டையை பயன்படுத்தி கடன் பெற்றதையும் அறிந்த செந்தில், தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்து சேலம் மாவட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா்.

கொங்கணாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போது, கோயமுத்தூா் பகுதியில் மூன்று ஆண்டுகளுக்கு முன் இதேபோன்று நூதன மோசடியில் அப்பெண் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட அப்பெண்ணை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

 

Tags :

Share via

More stories

Logo