அதிமுக உட்கட்சி தேர்தலை நடத்த இடைக்கால தடை-உச்சநீதிமன்றம்
அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிமுக பொதுக்குழு தொடர்பான விவகாரத்தில் என்ன தீர்வை எதிர்பார்க்கிறீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.அதற்கு ஓபிஎஸ் தரப்பில், கட்சிக்கு தேவையான அனைத்தையும் செய்ய தயாராக இருந்ததாகவும், ஆனால், தங்களை வெளியே தள்ளிவிட்டு எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவுகளை எடுத்துள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. மேலும், இந்த விவகாரத்தில் இதற்கு மேல் பழனிசாமி தரப்பு எந்த நடவடிக்கையும் எடுக்காத வகையில் தடைவிதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பேசிய நீதிபதிகள், மூல வழக்கில் வரும் விசாரணையின் முடிவே, நீதிமன்றத்தின் முடிவுக்குட்பட்டதாக இருக்கலாம் என தெரிவித்தனர். மேலும், பழனிசாமி தரப்பினர்தான் தற்போது பொறுப்பாளராக உள்ள நிலையில், தேர்தல் நடத்த ஏன் அவசரம் என கேள்வி எழுப்பினர். இதற்கு பழனிசாமி தரப்பில், தற்போதைய நிலையில் இதுபோன்ற உத்தரவோ, கருத்தோ நீதிமன்றம் தெரிவிக்க வேண்டாம் என கோரிக்கை வைக்கப்பட்டது.இதனை தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதுடன், அதிமுக தேர்தலை நடத்த இடைக்கால தடைவிதித்தும் உத்தரவிட்டனர்.
Tags :