காதலி தற்கொலை
சென்னை மாதவரம் மாத்தூரை சேர்ந்தவர் ஏஞ்சல்(23). பிகாம் பட்டதாரியான இவர் கொளத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார்.ஏஞ்சல் அதே பகுதியை சேர்ந்த கார் ஓட்டுனரான தனுஷ் என்பவரை கடந்த ஐந்து வருடங்களாக காதலித்து வந்தார். இந்த காதல் விஷயம் அறிந்த இரு குடும்பத்தினரும் திருமணம் செய்துவைக்க ஒத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் காதலன் தனுஷிற்கு பைக் உள்ளிட்ட பல பொருட்கள் ஏஞ்சல் வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக காதலர்களுக்குள் சண்டை வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே நேற்று திடீரென தனுஷ் ஏஞ்சலுக்கு ஒரு பெண்ணின் புகைப்படத்தை அனுப்பி, தான் இந்த பெண்ணை காதலிப்பதாக கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த ஏஞ்சல், இது குறித்து தனுஷிற்கு வீடியோகால் மற்றும் மெசெஜ் மூலமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த ஏஞ்சல் நேற்றிரவு தனது தம்பியை கடைக்கு அனுப்பிவிட்டு, வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவறிந்த மாதவரம் பால் பண்ணை போலீசார் ஏஞ்சலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக ஏஞ்சல் செல்போனில் வீடியோ பதிவிட்டு இறந்திருப்பது தெரியவந்தது. அதில் தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை, காதலன் தனுஷை யாரும் தாக்க வேண்டாம், நல்லா இருக்கட்டும் என கூறியுள்ளார்.
இதையடுத்து செல்போன் வீடியோ மற்றும் வாட்ஸ் அப் சாட்டுகளை வைத்து காதலன் தனுஷை போலீசார் அழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :