அகில இந்திய காங்கிரஸ் தலைவர் யார்? – இன்று தேர்தல்.தமிழ்நாட்டில் 711 பேர் வாக்களிக்க உள்ளனர்.

by Editor / 17-10-2022 09:40:35am
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் யார்? – இன்று தேர்தல்.தமிழ்நாட்டில் 711 பேர் வாக்களிக்க உள்ளனர்.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசி தரூர் போட்டியிடுகின்றனர். இன்று வாக்குப் பதிவுக்கு அனைத்து மாநிலங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான வாக்குப் பெட்டிகள், வாக்கு சீட்டுகள் டெல்லியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இன்று நடைபெறும் தேர்தலில் காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்கள், காங்கிரஸ் எம்.பி.க்கள், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ் மாவட்டங்களின் தலைவர்கள், காங்கிரஸ் மாநில கமிட்டிகளின் முன்னாள் தலைவர்கள் ஆகியோர் வாக்களிக்கும் உரிமை பெற்றவர்கள். அனைவருக்கும் கியூஆர் கோடுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில், காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரதாப் பானு சர்மா, உதவி தேர்தல் அதிகாரிகள் நெய்யாற்றின்கரை சனல், கர்நாடகாவை சேர்ந்த அஞ்சலி நிம்பல்கர் ஆகியோர் நேற்று மாலை வாக்குப்பெட்டிகளுடன் சென்னை வந்தனர். 

தமிழ்நாட்டில் 711 பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்காக டெல்லியில் இருந்து 4 வாக்கு பெட்டிகளும், ஒரு பெட்டிக்கு 200 வாக்குச்சீட்டுகள் வீதம் 800 வாக்குச்சீட்டுகளும் கொண்டு வரப்பட்டுள்ளன. வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஆகியோர் முன்னிலையில் வாக்குப்பெட்டிகள் திறந்து காண்பிக்கப்பட்டு மூடப்பட்டு தேர்தலுக்காக வைக்கப்படும். பின்னர் தேர்தல் முடிந்ததும் வாக்குப்பெட்டி சீலிடப்பட்டு இன்றைய தினமே டெல்லிக்கு எடுத்து செல்லப்படும்.

 

Tags :

Share via