காதலனுடன் மகள் ஓடியதால் தாயும், தந்தையும் தற்கொலை

by Staff / 18-11-2022 07:01:36am
காதலனுடன் மகள் ஓடியதால் தாயும், தந்தையும் தற்கொலை

கடலூர் அருகே உள்ள வேலங்கிபட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 65). அவரது மனைவி சுமதி. இவர்களது மகள் புஷ்பரோகிணி (19). இவர் சி. முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு வேதியியல் படித்து வருகிறார். இவருக்கும் பெரியாண்டிகுழி கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் வருகிற 20-ந் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது. இந்தநிலையில் நேற்று கல்லூரிக்கு செல்வதாக பெற்றோரிடம் புஷ்ப ரோகிணி கூறிவிட்டு சென்றார். ஆனால் மாலை நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த சுந்தர மூர்த்தி தனது மகளை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் புஷ்பரோகிணி கிடைக்கவில்லை

இதுதொடர்பாக அக்கம் பக்கம் விசாரிக்கையில் புஷ்பரோகிணிக்கு வேலங்கிபட்டு கிராமத்தை சேர்ந்த பால்ராஜ் (20) என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் காதலனுடன் சென்றுள்ளார். இந்த தகவலை அறிந்த சுந்தரமூர்த்தி, சுமதி ஆகியோர் அதிர்ச்சியடைந்தனர். மேலும் இதுபற்றி வெளியே தெரிந்தால் ஊர் மக்கள் கேவலமாக பேசுவார்களே என்று வேதனையடைந்தனர். எனவே தற்கொலை செய்வது என முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை கணவன்-மனைவி 2 பேரும் அதே பகுதியில் உள்ள சேகர் என்பவருக்கு சொந்தமான வயலில் அமர்ந்து விஷம் குடித்தனர். சிறிது நேரத்தில் கணவன்-மனைவி 2 பேரும் வாயில் நுரைதள்ளியபடி மயங்கினர்.

அப்போது அந்த வழியாக சென்ற விவசாயிகள் 2 பேர் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமானோர் அங்கு திரண்டனர். தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீசாரும் அங்கு விரைந்தனர். அப்போது மயங்கி கிடந்த கணவன்-மனைவியை பார்த்தபோது 2 பேரும் இறந்திருப்பதை போலீசார் உறுதி செய்தனர். இதுபற்றி அறிந்த சுந்தர மூர்த்தியின் மகன் சந்திரசேகரன் அங்கு விரைந்தார். தனது தாயும், தந்தையும் இறந்துகிடப்பதை பார்த்து கதறிதுடித்தார். உடனே 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் ராஜாமுத்தையா அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via