பாஜக நிர்வாகி கடத்திக் கொலை; ஊத்தங்கரை அருகே சடலத்தை வீசிச்சென்ற கும்பல்

by Editor / 24-11-2022 10:04:44pm
பாஜக நிர்வாகி கடத்திக் கொலை; ஊத்தங்கரை அருகே சடலத்தை வீசிச்சென்ற கும்பல்

திருப்பத்தூர் நகர பாரதிய ஜனதா கட்சியின் துணைத்தலைவராக இருந்தவர் கலிகண்ணன். இவர், திருப்பத்தூர் செட்டித்தெருவில் வாட்டர் கேன்களை விநியோகிக்கும் கடை வைத்திருக்கிறார். நேற்று இரவு 10 மணியளவில் கடையிலிருந்த கலிகண்ணனை, அங்கு ஸ்கார்பியோ காரில் வந்திறங்கிய மர்ம நபர்கள் சிலர், கத்தி முனையில் அதே காரில் ஏற்றி கடத்திச்சென்றதாகக் கூறப்படுகிறது. இரவு முழுவதும் வீடு திரும்பாத அவர், இன்று காலை கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வெப்பாலம்பட்டி பகுதியிலுள்ள கிரஷர் கம்பெனிக்கு அருகில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார். தகவலறிந்ததும், ஊத்தங்கரை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

முதற்கட்ட விசாரணையில், திருப்பத்தூரிலிருந்து ஊத்தங்கரை ஒரே நேர்வழிப் பாதை என்பதால், இந்தப் பகுதியை கொலையாளிகள் முன்கூட்டியே திட்டமிட்டு தேர்ந்தெடுத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. கலிகண்ணனை வெட்டி வீசியப் பின்னர் அவர்கள் சேலம் அல்லது பெங்களூரு மார்க்கமாக தப்பியிருக்கலாம் என்ற கோணத்தில், கொலையாளிகளை போலீஸார் தீவிரமாக தேடி வருகிறார்கள். கலிகண்ணனுக்கு கடந்த ஒரு மாதமாகவே கொலை மிரட்டல் இருந்துவந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் தனியாக செல்வதையும் தவிர்த்து வந்திருக்கிறார். இந்த நிலையில்தான் கடைக்குள்ளேயே புகுந்து அவர் கடத்திச்செல்லப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

 

Tags :

Share via