ஆவின் பால் பூத்தில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் திடீர் ஆய்வு.

by Editor / 27-11-2022 02:48:37pm
 ஆவின் பால் பூத்தில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் திடீர் ஆய்வு.

சென்னை அடையாறில் உள்ள ஆவின் பால் பூத்தில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்,மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்கின்ற பொருட்களில் பாலும் ஒன்று, அந்தப் பால் சரியான முறையில் மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறதா? அது காலம் தாழ்ந்து வருகிறதா? விற்கப்படும் பொருட்கள் சரியான முறையில் விற்பனை செய்யப்படுகிறதா? என்று ஆய்வு செய்யப்பட்டு வருவதாக கூறினார்.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் உள்ள பகுதிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். அந்த அடிப்படையில் இன்று அடையார் பகுதியில் உள்ள ஆவின் பூத்தில் ஆய்வு செய்தோம். வணிக பால் விலை ஏற்றத்திற்குப் பிறகு, பொதுமக்கள் சாதாரணமாக வாங்கும் பால் விலை எப்போதும் போல் அதே விலையில் தான் உள்ளது. அதில் எந்த மாற்றமும் இல்லை. வாணிப ரீதியாக உள்ள பால் மட்டும் தான் விலை உயர்ந்துள்ளது.


ஆரஞ்சு நிற பாக்கெட் கடந்த காலத்தில் 48 ரூபாயாக இருந்தது. அட்டைதாரருக்கு 46 ரூபாயாக இருந்தது. இப்போது அது 60 ரூபாயாக உயர்ந்துள்ளது. இருந்தாலும் இது வாணிப ரீதியாக மட்டும் தான். அட்டை வைத்திருப்பவர்களுக்கு இன்றும் 46 ரூபாய்க்கு தான் அளித்து வருகிறோம். மற்ற மாநிலங்களில் உள்ள அனைத்து பால் கம்பெனிகளை விட ஆவின் தான் விலை குறைவு. பொது சேவை நோக்கத்தோடு தான் இது செயல்படுகிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் 28 யூனிட்டிலும் தயாரிப்பு இருந்தும் ரூ.53 கோடி தான்வாணிபம் செய்ய முடிந்தது. திமுக ஆட்சிக்கு வந்து முதல் ஆண்டு ரூ.85 கோடி வாணிபத்தை உயர்த்தி காட்டினோம். ரூ.116 கோடி இந்தாண்டு உயர்த்தி காட்டி இருக்கிறோம். மேலும் இது தொடரும். ஆவின் கடைகளில் மற்ற பொருள்களை விற்றாலோ அல்லது விலை உயர்த்தி விற்றாலோ அந்த கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே சென்னையில் கிட்டத்தட்ட 12 கடைகள் மீது இது போன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட திட்டம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கிழக்கு ஆசிய நாடுகள் சிங்கப்பூர், மலேசியா, சிலோன், தைவான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் பல நாடுகளுக்கு நம் பொருட்களை விநியோகம் செய்யும் முயற்சி நடக்கிறது. தவறு செய்யும் அதிகாரிகள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நாசர் கூறினார்.
 

 

Tags :

Share via