செல்பி மோகத்தால் கல்குவாரி குட்டையில் விழுந்த திருமண ஜோடி திருமணம் தள்ளிவைப்பு.

by Editor / 10-12-2022 08:09:23pm
செல்பி மோகத்தால் கல்குவாரி குட்டையில் விழுந்த திருமண ஜோடி திருமணம் தள்ளிவைப்பு.

கேரள மாநிலம், கொல்லம் பரவூரைச் சேர்ந்தவர் வினு கிருஷ்ணன் (25). துபாயில் வேலை செய்துவருகிறார். அவருக்கும், கொல்லம் பாரிப்பள்ளியைச் சேர்ந்த சாந்தா எஸ்.குமார் (19) என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. அதோடு வெள்ளிக்கிழமை திருமணம் நடக்கவிருந்தது. அதற்காக துபாயிலிருந்து ஒரு வாரத்துக்கு முன்பு வினு கிருஷ்ணன் ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் வினு கிருஷ்ணனும், சாந்த்ராவும் சேர்ந்து ஆயிரவில்லி என்ற கோயிலுக்குச் சென்றிருக்கின்றனர். பின்னர் வேலம்மானுர் காட்டுப்பகுதிக்கு சென்ற அவர்கள் 120  அடி உயர பாட்டுப்புறம் பாறை மீது ஏறியிருக்கின்றனர். இந்தப் பாறையின் உச்சியில் நின்று சடயமங்கலம் பகுதி பாறை மீது அமைக்கப்பட்டிருக்கும் பெரிய ஜடாயு சிற்பம் மற்றும் பல இயற்கைக் காட்சிகளை கண்டு ரசித்து அந்தப் பாறை மீது நின்று வினு கிருஷ்ணனும், சாந்தாவும் செல்ஃபி எடுத்திருக்கின்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக கால் இடறி சாந்தா  கீழேயுள்ள கல்குவாரி குட்டையில் விழுந்திருக்கிறார். அவரைக் காப்பாற்றுவதற்காக வினு கிருஷ்ணனும் 120 அடி உயரத்திலிருந்து கல்குவாரி குட்டையில் குதித்திருக்கிறார்.
கல் குவாரி குட்டையில் குதித்த அவர் சாந்தாவின்  ஆடையைப் பிடித்து இழுத்து, அருகிலுள்ள பாறையில் அமரவைத்திருக்கிறார்.சாந்தாவின்  காலில் காயம் ஏற்பட்டதால் சத்தமாக அலறியிருக்கிறார். அலறல் சத்தம் கேட்டு அந்தப் பகுதியினர் அங்கு சென்று மீட்புபணியில் ஈடுபட்டதுடன் போலீஸ் மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புப் படையினர் கயிறு மற்றும் மிதவை மூலம் இருவரையும் மீட்டனர்.

அவர்கள் இருவரும் பாரிப்பள்ளி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். சாந்தாவின் காலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாகவும், வினுவுக்கு பெரிய அளவில் காயம் இல்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் இருவரும் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர்.
வினுகிருஷ்ணன்- சாந்தா  திருமணம் நிறுத்தப்பட்டு மாத்ருதேதியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.செல்பி மோகத்தால் நடந்த சம்பவம் பெரும்பரப்பரப்பை ஏற்படுத்தியது.

செல்பி மோகத்தால் கல்குவாரி குட்டையில் விழுந்த திருமண ஜோடி திருமணம் தள்ளிவைப்பு.
 

Tags :

Share via