திருப்பத்தூர் -ஆம்பூர் அருகேவிபத்து -: மாப்பிள்ளை, தாய், தாத்தா பலி

by Editor / 28-06-2021 07:11:43pm
  திருப்பத்தூர் -ஆம்பூர் அருகேவிபத்து -: மாப்பிள்ளை, தாய், தாத்தா பலி

 

”சென்னை, நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரமெளலி (55). இவரது மனைவி வசுந்தராதேவி (47). இவர்களது மகன் வேணுகோபால் (26). இவருக்கு கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் திருமண நிச்சயதார்த்த விழா  நடைபெற்றது. இதற்காக சந்திரமெளலி தன் மனைவி, மகனுடன் காரில் கிருஷ்ணகிரிக்குப் புறப்பட்டார். வழியில், ராணிப்பேட்டையில் உள்ள மாப்பிள்ளை வேணுகோபாலின் தாத்தா கண்ணைய்யா (94) என்ப வரை அழைத்துக்கொண்டு கிருஷ்ண கிரிக்குச் சென்ற சந்திரமெளலி அங்கு பெண் வீட்டில் நிச்சயதார்த்தத்தை முடித்துவிட்டு மீண்டும் காரில் சென்னைக்குப் புறப்பட்டனர்.
மாப்பிள்ளை வேணுகோபால் காரை ஓட்டினார். முன் இருக்கையில் தாத்தா கண்ணைய்யாவும், பின் இருக்கையில் சந்திரமெளலியும், வசுந்தராதேவியும் அமர்ந்திருந்தனர். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம் என்ற இடத்தில் இரவு 10.35 மணிக்கு கார் வந்தபோது முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றபோது எதிர்பாரவிதமாக லாரி மீது கார் பின்பக்கமாக மோதியது. இதில், கார் நொறுங்கியது. காரின் இடிபாடுகளில் 4 பேரும் சிக்கினர்.
இந்த விபத்தைக் கண்டதும் பொதுமக்கள் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். விபத்து குறித்து தகவலறிந்ததும் ஆம்பூர் கிராமியக் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர். இந்த விபத்தில் மாப்பிள்ளை வேணுகோபால், அவரது தாத்தா கண்ணைய்யா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். வசுந்தராதேவியும், அவரது கணவர் சந்திரமெளலியும் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி வசுந்தராதேவியும் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆக அதிகரித்தது.

 

Tags :

Share via