படப்பை அருகே கழுத்தில் வெட்டி கொலை

by Staff / 03-02-2023 02:11:20pm
படப்பை அருகே கழுத்தில் வெட்டி கொலை

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை அருகே ஆதனஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 38). இவர் பிளம்பிங், பெயிண்டிங் உள்ளிட்ட பல்வேறு கூலி வேலைகளை செய்து வந்தார். இவருக்கு மது பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று மது அருந்துவதற்காக ஆரம்பாக்கம் டாஸ்மார்க் கடைக்கு சென்று உள்ளார். டாஸ்மாக் கடைக்கு சென்ற சரவணன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் சரவணனின் உறவினர்கள் இரவு முழுவதும் தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஆரம்பாக்கம் டாஸ்மாக் கடை அருகில் ஏரி கரை ஓரமாக கழுத்தில் வெட்டு காயங்களுடன் ஒருவர் இறந்து கிடப்பதாக மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் போலீசார் சடலத்தை பார்த்தபோது ஆதனஞ்சேரி பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பது தெரியவந்தது. இதையடுத்து சரவணனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மணிமங்கலம் போலீசார் சரவணன் எதற்காக கொலை செய்யப்பட்டார்? யார் கொலை செய்தனர்? முன் விரோத காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

இதில் டாஸ்மாக் மது பான பாரில் ஏற்பட்ட தகராறில் சரவணன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற முடிவிற்கு போலீசார் வந்துள்ளனர். இந்த டாஸ்மாக் பாரில் 24 மணி நேரமும் மது விற்பனையால் இங்கு தொடர்ந்து கொலை கொள்ளை போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க வேண்டிய காவல்துறை வேடிக்கை பார்ப்பதால் தான் இது போன்ற குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என குடியிருப்பு வாசிகள் மற்றும் சமுக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து தாம்பரம் காவல் துணை ஆணையர் அதிவீர பாண்டியன் நேரில் ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர புலனாய்வில் உள்ளனர்.

 

Tags :

Share via