மதுரை - திருமங்கலம் புதிய இரட்டை ரயில் பாதையில் பிப்:13-ல் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

by Editor / 10-02-2023 06:29:44pm
மதுரை - திருமங்கலம் புதிய இரட்டை ரயில் பாதையில் பிப்:13-ல் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

மதுரை - திருமங்கலம் இடையே 17.32 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய இரட்டை ரயில் பாதையில் பெங்களூரு தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் திங்கட்கிழமை (பிப்ரவரி 13) அன்று ஆய்வு செய்ய இருக்கிறார். மதுரை - திருமங்கலம் இடையே காலை 09.30 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மோட்டார் டிராலி மூலம் ஆய்வு நடைபெற இருக்கிறது. பின்பு மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை திருமங்கலம் - மதுரை இடையே அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற இருக்கிறது. இந்த அதிவேக சோதனை ஓட்டம் நடைபெறும் வேளையில் பொதுமக்கள், ரயில் பாதை அருகே வசிப்போர் புதிய இரட்டை ரயில் பாதையை நெருங்கவோ கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புதிய இரட்டை பாதையில் செய்யப்பட்டுள்ள மின்மயமாக்கல் ஏற்பாடுகளை தெற்கு ரயில்வே தலைமை முதன்மை மின் பொறியாளர் ஏ. கே. சித்தார்த்தா செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 14) அன்று ஆய்வு செய்ய இருக்கிறார். சிறப்பு ஆய்வு ரயில் மூலம் காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை ஆய்வு நடைபெற இருக்கிறது. ஆய்வு முடிந்த பின் புதிய இரட்டை ரயில் பாதை மின்தடத்தில் 25000 வோல்ட் மின்சாரம் பாய்ச்சப்பட்டு சிறப்பு ஆய்வு ரயில் இயக்கி சோதனை செய்யப்பட இருக்கிறது.

 

Tags :

Share via