முன்பதிவில்லாத பயண சீட்டுகள் பதிவு செய்ய புதிய வசதி அறிமுகம்.

by Editor / 12-02-2023 02:11:44pm
முன்பதிவில்லாத பயண சீட்டுகள் பதிவு செய்ய புதிய வசதி அறிமுகம்.

ரயில் நிலையங்களில் முன்பதிவு இல்லாத பயணச் சீட்டுகள் பதிவு செய்ய கடைசி நேரத்தில் வரும் பயணிகள் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்க வேண்டி இருக்கிறது.  ‌ இதைத் தவிர்க்க முன்பதிவு இல்லாத பயண சீட்டுகளை மொபைல் போன் மூலம் பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ப்ளே ஸ்டோரில் யூடிஎஸ் மொபைல் ஆப் (UTS App) செயலியை தரவிறக்கம் செய்து எளிதாக பயண சீட்டுகளை பதிவு செய்யலாம். மேலும் சீசன் டிக்கெட்டுகள் பிளாட்பாரம் டிக்கெட் போன்றவற்றையும் பதிவு செய்து கொள்ளலாம். சீசன் டிக்கெட்டுகளை எளிதாக புதுப்பித்தும் கொள்ளலாம்.

ரயில் நிலையத்திலிருந்து 15 மீட்டர் தொலைவு முதல் 20 கிலோமீட்டர் வரை ரயிலுக்கு புறப்படுவதற்கு முன்பு வீட்டில் இருந்தே பயணச்சீட்டு பதிவு செய்து கொள்ளலாம்.  காகிதம் இல்லாத மற்றும் காகிதத்துடன் கூடிய பயண சீட்டுகள் பதிவு செய்யலாம். சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதம் இல்லாத பயணச் சீட்டு என்பது நாம் பயண சீட்டு பதிவு செய்த மொபைல் போன் யூடிஎஸ் செயலியில் "காண்க டிக்கெட்" (SHOW TICKET option) பகுதியில் உள்ள பயணச்சீட்டை டிக்கெட் பரிசோதரிடம் காண்பித்துக் கொள்ளலாம். காகிதத்துடன் கூடிய டிக்கெட்டிற்கு பயணச்சீட்டு பதிவு செய்யும்போது வந்த அல்லது குறுஞ்செய்தியில் வந்த அல்லது பதிவு வரலாற்றில் உள்ள பதிவு அடையாள எண் மற்றும் மொபைல் எண்ணை பயன்படுத்தி ரயில் நிலையத்தில் உள்ள தானியங்கி பயணச்சீட்டு பதிவு இயந்திரத்தில் பயணச்சீட்டு அச்சிட்டு கொள்ளலாம். சிறு சிறு கடைகளில் வணிக நிறுவனங்களில் உள்ளது போல க்யூஆர் கோட் (QR code) அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணச்சீட்டு அலுவலகம் அருகே காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தக் கியூ ஆர் கோட் -ஐ ஸ்கேன் செய்தவுடன் போக வேண்டிய ரயில் நிலையத்தின் பெயரை பதிவு செய்து மின்னணு வசதி வாயிலாக பணம் செலுத்தி முன்பதிவு இல்லாத பயண சீட்டு எளிதாக பதிவு செய்து கொள்ளலாம். சுற்றுச்சூழலை பாதுகாக்க காகிதம் இல்லா பயணச்சீட்டை பயன்படுத்தலாம். பயணச்சீட்டு பரிசோதகர் சோதனை செய்யும் போது மொபைல் போனில் பதிவு செய்த பயணச்சீட்டை காண்பிக்காவிட்டால் உரிய அபராதம் விதிக்கப்படும்.

தெற்கு ரயில்வேயில் ஏப்ரல் 2022 முதல் ஜனவரி 2023 வரை கடந்த பத்து மாதங்களில் மொபைல் போன் மூலம் 50.75 லட்சம் பயண சீட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2.51 கோடி பயணிகள் கூட்ட நெரிசல் இல்லாமல் பயணச்சீட்டு பதிவு செய்து ரயில் பயணம் மேற்கொண்டுள்ளனர். மொபைல் போன் பதிவு மூலம் பயண சீட்டு வருமானமாக ரூபாய் 24.82 கோடி ஈட்டப்பட்டுள்ளது.

 

Tags : uts

Share via