ஏலச்சீட்டு நடத்தி பணம் மோசடி

by Staff / 19-11-2022 02:02:34pm
ஏலச்சீட்டு நடத்தி  பணம் மோசடி

ஈரோடு அருகே அம்மாபேட்டை அருகே உள்ள சிங்கம்பேட்டை கேட் பகுதியை சேர்ந்த ஒருவர் மற்றும் நெரிஞ்சிப்பேட்டை பகுதியை சேர்ந்த ஒருவர் என 2 பேரும் ரூ. 5 லட்சம், ரூ. 10 லட்சம் என பல்வேறு ஏலச்சீட்டுகள் நடத்தி வந்துள்ளனர். இந்த ஏலச்சீட்டில் பவானி ராணா நகர் பகுதியை சேர்ந்த வேணி என்பவர் உள்பட 4 பேர் மாதம் தோறும் பணம் செலுத்தி வந்துள்ளனர். இதில் வேணி ரூ. 11 லட்சம் வரை ஏலச்சீட்டுக்கு பணம் செலுத்தியதாக கூறப்படுகிறது. ஏலச்சீட்டு முடிந்ததும் அவர்கள் 2 பேரிடம் வேணி தன்னுடைய பணத்தை கேட்டதாக தெரிகிறது. ஆனால் அவர்கள் 2 பேரும் ஏலச்சீட்டில் செலுத்திய பணத்தை வேணிக்கு திருப்பி தராமல் இழுத்தடித்ததாக தெரிகிறது.இந்த நிலையில் பாதிக்கப்பட்ட வேணி உள்பட 4 பேரும் தங்களுடைய தொகை முழுவதையும் ஏலச்சீட்டு நடத்திய 2 பேரிடம் இருந்து மீட்டு தரக்கோரி அம்மாபேட்டை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் அவர்கள் 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அவர்கள் 2 பேரும், பலரிடம் ரூ. 55 லட்சம் வரை மோசடி செய்து உள்ளதாக தெரியவந்து உள்ளது. எனினும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

 

Tags :

Share via