கருப்புக்கொடி காட்டுவதாக அறிவித்த சமூக ஆர்வலர் கைது

by Staff / 26-02-2023 02:41:21pm
கருப்புக்கொடி காட்டுவதாக அறிவித்த சமூக ஆர்வலர் கைது

ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் முகிலன். சமூக ஆர்வலரான இவர், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளராக உள்ளார். அரசுக்கு சொந்தமான கனிம வளங்களை பாதுகாக்க போராடுபவர்கள் மீது தாக்குதல் நடந்து வருகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்துக்கு வரும் தமிழக முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலினை நேரில் சந்தித்து மனு அளிக்க அனுமதி வேண்டும் என்று முகிலன் சென்னிமலை போலீசாரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. எனவே மு. க. ஸ்டாலினுக்கு எதிராக கருப்பு கொடி காட்ட போவதாக முகிலன் மற்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த தமிழ்செல்வன், விஸ்வநாதன் ஆகியோர் அறிவித்து இருந்தனர்.இதனால் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் போலீசார் சென்னிமலையில் உள்ள தமிழ்செல்வன் மற்றும் விஸ்வநாதன் ஆகியோரது வீட்டுக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்த 2 பேரையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்தனர். உடனே அங்கிருந்து சென்னிமலை காங்கேயம் ரோட்டில் உள்ள முகிலன் வீடு இருக்கும் பகுதிக்கு சென்று போலீசார் கண்காணித்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய, விடிய அந்த பகுதியிலேயே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் முகிலன் ஒரு மனுவுடன், பையில் கருப்புகொடியை வைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது அங்கு நின்றிருந்த சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் முகிலனிடம் எங்கு செல்கிறீர்கள்? என்று கேட்டனர். அதற்கு அவர், ஈரோட்டுக்கு வரும் முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு எதிராக கருப்புகொடி காட்ட செல்வதாக கூறினார்.
இதனால் போலீசார் அவரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினார்கள். அப்போது போலீசாருக்கு எதிராக முகிலன் கோஷம் எழுப்பினார். அதைத்தொடர்ந்து அவரை சென்னிமலை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக மு. பாரதி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Tags :

Share via

More stories

Logo