எடப்பாடி அருகே வனப்பகுதியில் காட்டுத் தீ

by Staff / 26-02-2023 02:34:47pm
எடப்பாடி அருகே வனப்பகுதியில் காட்டுத் தீ

எடப்பாடியை அடுத்த தங்கையூா் ஊராட்சிக்கு உட்பட்ட கோணமோரி அரசு கலைக் கல்லூரியின் எதிா்ப்புறம் சூரியன் மலைப்பகுதியில் வனத்துறை மற்றும் தனியாருக்குச் சொந்தமான நிலங்களில் காடுகள் அமைந்துள்ளன. கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் பகல் நேரங்களில் கடும் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், மரங்கள், செடிகள் காய்ந்து இருந்ததால் சனிக்கிழமை நேரத்தில், திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கின. அப்பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருந்த நிலையில், தீ மேலும் பல பகுதிகளுக்கு பரவியது. அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதுகுறித்து எடப்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா். தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினா் நீண்ட நேரமாக போராடி தீயினை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனா். தொடா்ந்து அப்பகுதியில் முகாமிட்டுள்ள எடப்பாடி வட்டாட்சியா் லெனின், காட்டுத் தீ மேலும் வேறு பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கும் வகையில் முன்னேற்பாட்டு பாதுகாப்புப் பணிகளை முடிக்கிவிட்டுள்ளாா். அப்பகுதியில் இருந்த சிறு செடி, கொடிகள் அகற்றப்பட்டு காற்றின் வேகத்தால் தீ வனப்பகுதியில் உள்ள மற்ற இடங்களுக்கு பரவாமல் தடுத்து நிறுத்தப்பட்டது.அப்பகுதியில் முகமிட்டுள்ள வனத்துறையினா் மற்றும் வருவாய்த் துறையினா் காட்டுத் தீ வேறு எங்கேனும் பரவி உள்ளதா என தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.இது குறித்து கொங்கணாபுரம் போலீஸாா் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனா்.இத்தீவிபத்து குறித்து எடப்பாடி வட்டாட்சியா் லெனின் கூறுகையில்:தற்போது கோடை காலம் ஆரம்பமாகும் நிலையில், எடப்பாடியின் தெற்கு எல்லைப் புரத்தில் உள்ள தேவன்ணகவுண்டனூா் மற்றும் சூரியன் மலையை ஒட்டிய வனப்பகுதியில் மரம், செடி கொடிகள் அதிக அளவில் காய்ந்து தீப்பற்றக்கூடிய நிலையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், எளிதில் தீப்பற்றக்கூடிய எந்தப் பொருளையும் வனத்தை ஒட்டிய பகுதிக்குள் எடுத்துச் சொல்லவோ வைத்திருக்கவோ அனுமதி இல்லை எனவும், வனப்பகுதியில் தீ விபத்து ஏற்படும் வகையில் யாரேனும் அஜாக்கிரதையாக செயல்பட்டால் அவா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
 

 

Tags :

Share via