சென்னையில் கொலை நடந்த 3 மணி நேரத்தில் 6 பேர் கும்பல் கைது

by Editor / 24-07-2021 09:21:43am
சென்னையில்  கொலை நடந்த 3 மணி நேரத்தில்  6 பேர் கும்பல் கைது

சென்னை செம்மஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  சுனாமி நகர் 81வது குறுக்கு தெருவில் சாலையின் ஓரம் படுத்திருந்த நபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதாக போலீசாருக்கு தகவல் வந்தது. துரைப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இறந்து போன நபர் பெயர் வேலு (வயது 48) என்பதும், சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் கொசு மருந்து அடிக்கும் வேலை செய்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது.வேலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவமாக அடையாறு துணைக்கமிஷனர் விக்ரமன் மேற்பார்வையில் துரைப்பாக்கம் உதவிக்கமிஷனர் ரவி தலைமையில் தனிப்படை அமைத்து முதற்கட்ட விசாரணை தொடங்கியது.

சம்பவ இடத்தில் விசாரணை நடத்தியதில் இறந்துபோன வேலுவின் மகன் ஸ்ரீநாத் மற்றும் மருமகன் சுரேஷ் இருவரும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பில்லா என்ற திலீப் குமார் என்பவரை கொலைசெய்த வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது.

அதனால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக அவரது கூட்டாளிகள் பாலாஜி (எ) சேட்டு பாலாஜி (வயது 25), சார்லஸ் (வயது 19), சஞ்சய் (வயது 19) ஆகியோருடன் மேலும் 3 இளம் சிறார்கள் சேர்ந்து முன்பகை காரணமாக சுரேஷ் தற்போது சிறையில் இருந்து வருவதால் அவரை பழிவாங்கும் நோக்கில் அவரின் மாமனரான வேலு (வயது 48) என்பவரை கொலை செய்ததும் தெரிய வந்தது.அதனையடுத்து தனிப்படை போலீசார் சம்பவம் நடைபெற்ற 3 மணி நேரங்களிலேயே பாலாஜி (எ) சேட்டு பாலாஜி (வயது 25), சார்லஸ் (வயது 19), சஞ்சய் (வயது 19) மற்றும் மூன்று இளஞ்சிறார் உட்பட 6 பேரையும் கைது செய்தனர்.

 

Tags :

Share via