உடன்குடி அருகே சாலை விபத்தில் புது மாப்பிள்ளை பலி

by Staff / 28-02-2023 02:13:38pm
உடன்குடி அருகே சாலை விபத்தில் புது மாப்பிள்ளை பலி

தூத்துக்குடி வெள்ளப்பட்டியை சேர்ந்த அமலன் என்பவருடைய மகன் மிக்கேல் (வயது 22), மீனவர். உடன்குடி அருகே உள்ள ஜெ. ஜெ. நகரில் வசித்து வந்தார். இவருக்கு சுமார் 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணியளவில் புது மாப்பிள்ளை மிக்கேலும், அவருடைய நண்பர் பரமசிவம் மகனான 9-ம் வகுப்பு மாணவர் மணிகண்டனும் மோட்டார் சைக்கிளில் உடன்குடியை நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை மிக்கேல் ஓட்டினார்.உடன்குடி காலங்குடியிருப்பு பகுதியில் சென்றபோது, மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த சுவரில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட மிக்கேல் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். சற்று தொலைவில் மணிகண்டன் படுகாயங்களுடன் கிடந்தான். அக்கம்பக்கத்தினர் மணிகண்டனை மீட்டு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்பு அவன் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் விசாரணை இதுபற்றி அறிந்த குலசேகரன்பட்டினம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். மிக்கேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புது மாப்பிள்ளை விபத்தில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via