யூ-டியூபர் சாட்டை துரைமுருகன் மீது வழக்கு!

by Editor / 12-06-2021 10:30:31am
யூ-டியூபர் சாட்டை துரைமுருகன் மீது  வழக்கு!
  • திருச்சியில் கடை உரிமையாளரை மிரட்டியது தொடர்பாக கைது செய்யப்பட்ட யூ-டியூபர் சாட்டை துரைமுருகன் மீது குழந்தைகள் புகைப்படங்களை தவறாகப் பயன்படுத்தியது உள்ளிட்ட மேலும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி கேகே நகரில்,வினோத் என்பவர் வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார்.இவர் சமீபத்தில்,விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை பற்றி இழிவாகப் பேசி சமூக வலைதளங்களில் விமர்சித்துள்ளார். இதனையடுத்து,நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் யூடியூப் பிரபலமான சாட்டை முருகன் உள்ளிட்ட 4 பேர் நேரடியாகச் சென்று,விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை பற்றி,இழிவாக பேசக்கூடாது எனக் கூறி,வினோத்தை மிரட்டி மன்னிப்பு கேட்க செய்துள்ளனர். இதனால்,கடை உரிமையாளர் வினோத்,தான் மிரட்டப்பட்டது தொடர்பாக,போலீசில் புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து,சாட்டை துரைமுருகன்,வினோத், சரவணன், சந்தோஷ் ஆகிய 4 பேர் திருச்சியில் கார் நிறுவன ஊழியரை மிரட்டிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சாட்டை திருமுருகன் நாம் தமிழர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 4 பேர் கைது செய்யப்பட்டதற்கு சீமான் கண்டனம்: இதுகுறித்து கண்டனம் தெரிவித்து,நாம் தலைவர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது: ,"தமிழ்த்தேசிய இனத்தின் ஒப்பற்ற எம் தேசியத் தலைவர், என்னுயிர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களைப் பற்றி மிகவும் இழிவாகப் பதிவுகள் இட்ட திருச்சியைச் சேர்ந்த வினோத் என்பவரை நேரடியாகச் சந்தித்து,அவருக்கு புரிதல் ஏற்படுத்தி காவல்துறை முன்னிலையில் மறுப்பு காணொளி வெளியிட வைத்த ஊடகவியலாளர் சாட்டை துரைமுருகன்,வினோத்,சந்தோஷ்,சரவணன் ஆகியோரை காவல்துறை திடீரென கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. மாற்றுக்கருத்து கொண்டவருக்குப் புரிதல் ஏற்படும் வண்ணம் நேரடியாகச் சென்று விளக்கமளித்து அவருக்குப் புரிதலை ஏற்படுத்திக் காவல்துறை முன்னிலையில் எவ்விதமான வற்புறுத்தலும் இல்லாமல் புரிதலின் அடிப்படையில் மறுப்பு காணொளி வெளியிட செய்வதென்பது கருத்துரிமை சார்ந்த செயல்பாடு. இதை மாபெரும் குற்றமாக கருதி தம்பிகளை கைது செய்திருப்பது என்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட செயல்.சட்டத்திற்குப் புறம்பாக தமிழ்நாடு காவல்துறை கைது செய்துள்ள தம்பிகள் சாட்டை துரைமுருகன், வினோத், சந்தோஷ் என்ற மகிழன், சரவணன் ஆகியோரை உடனடியாக விடுதலைசெய்யவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்", என்று வலியுறுத்தினார். இந்நிலையில் திருச்சியில் கடை உரிமையாளரை மிரட்டிய விவகாரத்தில் கைதான யூடியூபர் சாட்டை துரைமுருகன் மீது குழந்தைகள் புகைப்படங்களை தவறாக பயன்படுத்தியது உள்ளிட்ட மேலும் 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

Tags :

Share via