நாகர்கோவிலில் கலைவாணர் மாளிகையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  திறந்து வைத்தார். 

by Editor / 07-03-2023 04:13:11pm
நாகர்கோவிலில் கலைவாணர் மாளிகையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  திறந்து வைத்தார். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பேரறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தின் அருகில் நான்கு தளங்களுடன் 10.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய அலுவலகக் கட்டடமான "கலைவாணர் மாளிகை”-யை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். 
கலைவாணர் கலையரங்க வளாகத்தில் கட்டப்பட்டுள்ள நாகர்கோவில் மாநகராட்சிக்கான புதிய அலுவலகக் கட்டடமான "கலைவாணர் மாளிகை”, கீழ் தளம் மற்றும் நான்கு தளங்களுடன் மொத்தம் 56,809 சதுர அடி கட்டடப் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இதில் கீழ் தளத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம், ஓட்டுநர்கள் ஓய்வு அறையும், முதல் தளத்தில் மேயர் அறை, துணை மேயர் அறை, நிர்வாக பிரிவு, தகவல் மற்றும் தொழில் நுட்பப் பிரிவு, தாய்மார்கள் பாலுட்டும் அறை, பார்வையாளர் அறை, உணவு அருந்தும் அறை, வரவேற்பறை, வரி வசூல் மையம் ஆகியவையும், இரண்டாவது தளத்தில் ஆணையாளர் அறை, மாநகர பொறியாளர் அறை, பொறியியல் பிரிவு, விழா மண்டபம், கலந்தாய்வு அரங்கம், காணொளி காட்சி அறை ஆகியவையும், 
மூன்றாவது தளத்தில் மாமன்ற கூட்ட அரங்கம், நகர திட்டமிடுநர் அறை, மாநகர் நல அலுவலர் அறை, நகரமைப்புப் பிரிவு, பொது சுகாதாரப் பிரிவு, நகரசார் அளவர் அறை ஆகியவையும், நான்காவது தளத்தில் பத்திரிக்கையாளர் அறை, வருவாய் பிரிவு, பதிவறை ஆகியவையும் அமைந்துள்ளது. மேலும், இவ்வலுவலகக் கட்டடத்தில், தீயணைப்பு வசதிகள், கண்காணிப்பு  கேமர வசதிகள், இரண்டு மின் தூக்கிகள், குளிர்சாதன வசதி மற்றும் உயர்கூரை அமைப்புடன் கூடிய மாமன்ற அரங்கம், குடிநீர் மற்றும் கழிவறை போன்ற வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. 


இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர், கே.என். நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர், இ. பெரியசாமி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர், த. மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ஆர். மகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.ஜி.பிரின்ஸ், எஸ். ராஜேஷ் குமார், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை செயலாளர் ஜெ.குமரகுருபரன், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன மேலாண்மை இயக்குநர் ஜான் லூயிஸ், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் பி.என். ஸ்ரீதர், துணை மேயர் மேரி பிரின்சி லதா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர், ஆனந்த் மோகன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via