ராகுல் காந்தியுடன் பிரஷாந்த் கிஷோர் சந்திப்பு

by Editor / 13-07-2021 05:00:52pm
ராகுல் காந்தியுடன் பிரஷாந்த் கிஷோர் சந்திப்பு



2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்கான பணிகளை இப்போதே அரசியல் கட்சிகள் தொடங்கி விட்டன. கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில்பாஜக வெற்றி பெற முக்கிய பங்காற்றிய தேர்தல் உத்தியாளரான பிரஷாந்த் கிஷோர், தற்போது அக்கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கிறார்.
இந்த நிலையில், பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் அடங்கிய மிகப்பெரிய கூட்டணியை அமைக்கும் முயற்சியில் பிரஷாந்த் கிஷோர் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. 
பாஜகவுக்கு எதிரான கூட்டணியை அமைக்கும் பொருட்டு பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சிகளுடன் பிரஷாந்த் கிஷோர் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறார். அந்த வகையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை அண்மையில் சந்தித்த பி.கே., சுமார் 3 மணி நேரம் அவருடன் ஆலோசனை மேற்கொண்டார்.
பாஜக எதிர்ப்பாளர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை மெகா கூட்டணி என்பது மட்டுமல்ல; காங்கிரஸ் கட்சியால் மட்டுமே பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற முடியாது என்ற கருத்தும் நிலவுவதால், பாஜக ஆளாத மாநிலங்கள், அக்கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கும் மாநில கட்சிகள் அணி திரள்வதற்கான காரணமாகவும் உள்ளது என்று சுட்டிக் காட்டும் அரசியல் நோக்கர்கள், பிரஷாந்த் கிஷோரால் மட்டுமே அவர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வர முடியும் என்றும் குறிப்பிடுகின்றனர். ஆனால், அக்கூட்டணியை அமைப்பதில் சில சிக்கல்களும் உள்ளன.
இதனிடையே, 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியுடன் பி.கே.வின் ஐபேக் டீம் ஒப்பந்தம் போடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பின்னணியில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் பிரஷாந்த் கிஷோர் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via