ஆபரேஷன் செய்து கொண்ட இரண்டு மாத கர்ப்பிணி பலி
அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட 2 மாத கர்ப்பிணி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த தொள்ளாமூர் நடுத்தெருவை சேர்ந்தவர் செல்வகுமார், 33; லாரி டிரைவர். இவரது மனைவி எழிலரசி, 29; இவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். கடந்த 10ம் தேதி, எழிலரசிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அவரை உறவினர்கள் வானுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். பின், திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், எழிலரசி இரண்டு மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும், குழந்தை கருக்குழாயில் வளர்வதால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். இதையடுத்து செல்வகுமார் அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளார். தொடர்ந்து எழிலரசிக்கு, 11ம் தேதி டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். அன்று இரவு எழிலரசிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நள்ளிரவு 1: 00 மணிக்கு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். இதுகுறித்து செல்வகுமார் அளித்த புகாரின் பேரில், வானுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Tags :