சிறுமியை கொன்று புதைத்த காதலன் உட்பட 2 பேர் கைது
விழுப்புரம் அருகே கொலை செய்து புதைக்கப்பட்ட, 17 வயது சிறுமி யார் என்பது தெரிய வந்துள்ளது. சிறுமியை கொலை செய்த காதலன் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் அடுத்த சாலவனுார் கிராமத்தில், சுடுகாடு அருகே கடந்த, 6ம் தேதி கொலை செய்து புதைக்கப்பட்டிருந்த அடையாளம் தெரியாத பெண்ணின் உடலை கஞ்சனுார் போலீசார் மீட்டனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், அப்பெண் மூன்று மாத கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. அவரை அடையாளம் காண்பது போலீசாருக்கு சவாலாக இருந்தது. அதனால் அப்பெண் அணிந்திருந்த நகை, உடை அடையாளங்களை போலீசார் வெளியிட்டனர். அதன் அடிப்படையில், விழுப்புரம் அடுத்த கண்டமானடி கிராமத்தைச் சேர்ந்த, 17 வயது சிறுமியின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கஞ்சனுார் போலீசாரை தொடர்பு கொண்டனர். சிறுமியின் உடலை பார்த்து, கொலை செய்யப்பட்டது அவர் தான் என, உறுதி செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. சித்தேரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அகிலன், 23; டிரம்ஸ் கலைஞர். இவர், சிறுமியை சில மாதங்களாக காதலித்து வந்துள்ளார். இருவரும் நெருங்கி பழகியதில் சிறுமி கர்ப்பமானார். அதிர்ச்சியடைந்த சிறுமி, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தியதால், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த, 3ம் தேதி நடந்த தகராறில், ஆத்திரமடைந்த அகிலன், சிறுமியை கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். பின், கக்கனுாரைச் சேர்ந்த நண்பர் சுரேஷ்குமார், 22, உதவியுடன் சாலவனுாரில் சிறுமியின் உடலை புதைத்து விட்டு தப்பி உள்ளனர். தலைமறைவாக இருந்த அகிலன், சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டனர்.
Tags :