டிசம்பருக் குள் அதிமுக  உட்கட்சித் தேர்தல்

by Editor / 17-07-2021 03:59:30pm
டிசம்பருக் குள் அதிமுக  உட்கட்சித் தேர்தல்

 


திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,
"அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அக்கட்சியின் உட்கட்சித் தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை. கட்சியின் சட்ட திட்டங்களின்படி அனைத்து அடிப்படை உறுப்பினர்களும் வாக்களித்து பொதுச்செயலாளர் பதவியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஆனால், தற்போது அது போன்று அதிமுகவில் இல்லை. மக்கள் பிரதிநிதித்துச்சட்டத்தின்படி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு உட்கட்சித் தேர்தல் கட்டாயம் நடத்தப்பட வேண்டும்.அதிமுக சார்பில் கடந்த 2014ஆம் ஆண்டிற்குப் பிறகு உட்கட்சித் தேர்தல் நடத்தி நிர்வாகிகளை நியமிக்கவில்லை.
சர்வாதிகாரப் போக்குடன் கட்சியின் தலைமை நிர்வாகிகளை தன்னிச்சையாக நியமித்து வருகிறது. இது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் விதிகளுக்கு எதிரானது.இதுதொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் தான் பலமுறை புகார் அளித்தும் அந்தப் புகாருக்கு இதுவரை எந்தவிதமான பதிலும் இல்லை. மேலும் அதிமுக உட்கட்சித் தேர்தலை நடத்தாமல், நிர்வாகிகள் நியமனத்திற்குத் தடை விதிக்க வேண்டும்" என அவர் கோரியிருந்தார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் முன்  விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'அதிமுக உட்கட்சித் தேர்தல் நடைபெறாமல் நிர்வாகிகள் நியமிப்பது சட்டவிரோதம் எனவும்; இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையம் மறுத்து வருவதாகவும்’ தெரிவித்தார்.
அப்போது நீதிபதி, இந்த வழக்கில் ஏன் அதிமுகவை எதிர் மனுதாரராக சேர்க்கவில்லை எனக் கேள்வி எழுப்பினர்.தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபால், 'அதிமுகவின் உட்கட்சி தேர்தலை வருகிற டிசம்பர் மாதத்திற்குள் முடித்து விடுவதாக அக்கட்சியின் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டிருப்பதாக' அவர் தெரிவித்தார்.இதனையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் அதிமுகவையும் எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

 

Tags :

Share via