மேட்டூர் அருகே ஏரியில் மூழ்கி சிறுவர்கள் இருவர் பலி

by Staff / 31-05-2023 01:01:02pm
மேட்டூர் அருகே ஏரியில் மூழ்கி சிறுவர்கள் இருவர் பலி


சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ளவிருதாசம்பட்டி முனியப்பன் கோவில் காட்டு வளவை சேர்ந்தவர் சுபாஷ். இவரது மகன் பரணிதரன்(15) கந்தனூரில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.இதேபோல் நங்கவள்ளி, கரட்டுப்பட்டியை சேர்ந்த தங்கராசு என்பவரது மகன் கிரித்திஷ்(8) கோனூர் சமத்துவபுரம் அருகே உள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து முடித்துள்ளார். பள்ளி விடுமுறை என்பதால் உறவினரான சுபாஷின் வீட்டிற்கு கிரித்திஷ் வந்துள்ளார். நேற்று பிற்பகலில் விளையாடச் சென்ற இருவரும் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் மாலையில் பெற்றோர்களும், உறவினர்களும் இருவரையும் தேடிக் கொண்டிருந்தனர்.அப்போது விருதாசம்பட்டி கிராமம் முனியப்பன் கோவில் காட்டூர் ஏரியில் குளிக்க சென்றதாக அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர். இதையடுத்து, கிராம மக்கள் ஏரி கரையில் தேடிய பொழுது இருவரின் ஆடைகளும் செருப்பும் கரையில் கிடந்தன. ஏரியில் மூழ்கி தேடிய பொழுது இருவரின் சடலங்களும் ஏரியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது.சடலத்தை கைப்பற்றிய நங்கவள்ளி போலீசார் பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளி திறக்க சில நாள்களே உள்ள நிலையில் மாணவர்கள் இருவர் ஏரியில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக நங்கவள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

 

Tags :

Share via