உள்ளாட்சித் துறை பணிகள் குறித்த மண்டல அளவிலான ஆலோசனை கூட்டம் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது.

by Editor / 25-09-2023 09:50:47pm
உள்ளாட்சித் துறை பணிகள் குறித்த மண்டல அளவிலான ஆலோசனை கூட்டம் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில்  நடைபெற்றது.

 

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ளாட்சித் துறை பணிகள் குறித்த மண்டல அளவிலான ஆலோசனை கூட்டம் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.கூட்டத்தில் நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு, சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் தலைமை தாங்கிபேசினர். இதில் நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சிகள், 3 மாவட்டங்களின் நகராட்சிகள், பேரூராட்சிகளில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள், குடிநீர் மேம்பாட்டு திட்டங்கள் குறித்து அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் அமைச்சர் கே.என்.நேரு ஆலோசனை நடத்தினார். 

கூட்டத்தில் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன், நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் சிவராசு, குடிநீர் வடிகால் வாரியம் மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, இணை மேலாண்மை இயக்குனர் சரவணன், பேரூராட்சிகளின் இயக்குனர் கிரண், தனுஷ் குமார் எம்.பி., ஆட்சியர்கள் கார்த்திகேயன், செந்தில்ராஜ், துரை ரவிச்சந்திரன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், ராஜா, மார்க்கண்டேயன், பழனி நாடார், சண்முகையா, சதன் திருமலை குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் நடைபெறும் திட்டப்பணிகளை அமைச்சர் நேரு, அதிகாரிகள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் இருந்து காரில் இன்று அதிகாலை புறப்பட்டு நெல்லை வந்தார். வண்ணார்பேட்டையில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு இன்று காலை வந்த அவருக்கு தி.மு.க. நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

Tags :

Share via