அதிமுக சின்னம்: ஓபிஎஸ் ஐகோர்ட்டில் முறையீடு

by Staff / 08-11-2023 01:31:27pm
அதிமுக சின்னம்: ஓபிஎஸ் ஐகோர்ட்டில் முறையீடு

அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை ஓபிஎஸ் தரப்பு பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்த தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மனு தாக்கல் செய்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என். சதீஷ்குமார் நேற்று பிறப்பித்த உத்தரவில், அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பினர் பயன்படுத்த கூடாது என்று இடைக்கால தடை விதித்து, வழக்கை நவ. 30-க்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர். மகாதேவன் மற்றும் முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் ஓபிஎஸ் தரப்பில் ஒரு முறையீடு செய்யப்பட்டது. தனி நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து, மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும், அந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்றும் முறையிடப்பட்டது. இந்த முறையீட்டைக் கேட்ட நீதிபதிகள், மனு தாக்கல் செய்யும் நடைமுறைகள் முடிந்து, எண்ணிடும் நடைமுறைகள் முடிவுற்றால் இந்த வழக்கை வரும் வெள்ளிக்கிழமை (நவ. 10) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.

 

Tags :

Share via