கைதான வாலிபர் போலீசை தாக்கி தப்பி ஓட்டம்

by Staff / 25-11-2023 04:50:57pm
கைதான வாலிபர் போலீசை தாக்கி தப்பி ஓட்டம்

தேனியில் இருந்து திண்டுக்கல்லுக்கு காரில் கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போதைப்பொருள் கடத்தல் நுண்ணறிவுப் பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் நேற்று இரவு செம்பட்டி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர்.

அப்போது தேனியில் இருந்து திண்டுக்கல் வந்த 2 கார்களை நிறுத்தி சோதனை நடத்தினர். அந்த காரில் 22 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரில் வந்த கம்பத்தைச் சேர்ந்த சதீஸ்குமார் (25), நவீன்குமார் (30), பாண்டீஸ்வரன் (28) ஆகிய 3 பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக தயார்படுத்தினர்.

மருத்துவ பரிசோதனைக்காக அவர்கள் 3 பேரும் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது அங்கிருந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி சதீஸ்குமார் என்பவர் தப்பி ஓடினார். பாதுகாப்புக்காக நின்று கொண்டு இருந்த நுண்ணறிவு பிரிவு போலீஸ் நாகலிங்கம் (35) என்பவர் தடுக்க முயன்றபோது அவரையும் தாக்கி கீழே தள்ளி விட்டு ஓடினார்.

இதில் நாகலிங்கம் படுகாயமடைந்தார். தப்பி ஓடிய சதீஸ்குமார் தனது நண்பருக்கு உடனடி தகவல் கொடுத்து காரில் ஏறி சென்றார். இதனைத் தொடர்ந்து அவரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். பிடிபட்ட மற்ற 2 பேர்களான நவீன்குமார் மற்றும் பாண்டீஸ்வரன் ஆகிய இருவரும் மருத்துவ பரிசோதனைக்கு பின்பு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

Tags :

Share via

More stories