2011 தேர்தலின் போது தாசில்தாரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம், சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோயிலுக்குள், ஓட்டுக்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து மேலூர் தேர்தல் அதிகாரியும் தாசில்தாருமான காளிமுத்து மற்றும் தேர்தல் அலுவலர்கள், வீடியோ கேமராமேனுடன் அங்கு சென்று வீடியோ எடுத்தனர்.
இதற்கு மு.கஅழகிரி தரப்பு கடும் எதிர்ப்புத் தெரிவித்து அழகிரியுடன் இருந்தவர்கள் தன்னை அடித்து, உதைத்ததாக தாசில்தார் காளிமுத்து கீழவளவு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதனையடுத்து மு.க. அழகிரி, மதுரை துணை மேயர் மன்னன் மற்றும் திமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளான ரகுபதி, திருஞானம் உள்ளிட்ட 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று மதுரை மாவட்ட JM 1 நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. வழக்கு தொடர்பாக ஏற்கனவே சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
தாசில்தாரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி உள்ளிட்ட 17 பேர் மதுரை மாவட்ட முதலாவது நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் அனைவரும் விடுதலைசெய்யப்பட்டனர்.
Tags : மு.க.அழகிரி உள்ளிட்ட 17 பேர் விடுதலை