விஷம் குடித்து விட்டு காரை ஓட்டிய விவசாயி விபத்தில் சிக்கி பலி

by Admin / 12-08-2021 01:50:14pm
விஷம் குடித்து விட்டு காரை ஓட்டிய விவசாயி விபத்தில் சிக்கி பலி

மருத்துவமனையில் இருந்த கமல் பிரசாத் திடீரென காரை எடுத்து கொண்டு கோபிசெட்டி பாளையத்திற்கு புறப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் கமல் பிரசாத் (வயது 26) விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்வநாயகி (23) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. செல்வநாயகி 7 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

கணவன்-மனைவி இருவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்திருந்த செல்வநாயகி கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.

இதை கண்டதும் அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு கோவை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி செல்வநாயாகி பரிதாபமாக இறந்தார்.

இந்தநிலையில் மருத்துவமனையில் இருந்த கமல் பிரசாத் திடீரென காரை எடுத்து கொண்டு கோபிசெட்டி பாளையத்திற்கு புறப்பட்டார்.கார் அவினாசியை அடுத்த தெக்கலூர் அருகே வந்த போது கமல்  பிரசாத் முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றுள்ளார்.

அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக ரோட்டில் உள்ள தடுப்பு கம்பி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த கமல் பிரசாத் மனைவி இறந்த அதே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப் பட்டார்.

டாக்டர்கள் பரிசோதித்ததில் கமல் பிரசாத், மனைவி இறந்த துக்கம் தாங்காமல் பூச்சி மருந்து குடித்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கர்ப்பிணி மனைவி விஷம்  குடித்து இறந்த நிலையில் கணவரும் பூச்சி மருந்து குடித்து விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via