சேரன்மகாதேவியில் வயதான தம்பதியிடமிருந்து ரயிலில் 16 பவுன் நகை கொள்ளை.ஒருவன் கைது.

by Editor / 09-08-2024 10:08:24pm
சேரன்மகாதேவியில் வயதான தம்பதியிடமிருந்து ரயிலில் 16 பவுன் நகை கொள்ளை.ஒருவன் கைது.

சேரன்மகாதேவியில் வயதான தம்பதியிடமிருந்து ரயிலில் கொள்ளை அடிக்கப்பட்ட 16 பவுன் தங்க நகைகளை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் மீட்டு சாதனை படைத்துள்ளனர்.
சேரன்மகாதேவி கடைய தெருவை  சேர்ந்தவர் மேகலிங்கம்(72). இவரும் இவரது மனைவி கார்த்தியாயினி (64) ஆகிய இருவரும் கடந்த ஆகஸ்ட் 1 இல் பாலருவி எக்ஸ்பிரஸில் சேரன்மகாதேவியில் இருந்து கேரள மாநிலம்  எர்ணாகுளத்திற்கு சென்றுள்ளனர். அப்போது 16 பவுன் தங்க நகைகள் அடங்கிய பேக்கினை சீட்டுக்கு அடியில் வைத்து விட்டு தம்பதியினர் உறங்கியுள்ளனர். தென்மலை ரயில்வே ஸ்டேஷன் கடந்த போது பேக் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் இதுகுறித்து புனலூர் ரயில்வே போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த புனலூர் ரயில்வே போலீசார், மதுரை மண்டல ரயில்வே பாதுகாப்பு படை கோட்ட பாதுகாப்பு ஆணையர் கார்த்திகேயன், உதவி கோட்ட பாதுகாப்பு ஆணையர் சிவதாஸ் ஆகியோரின் ஆலோசனையின் படி நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து தென்காசி ரயில் நிலையம் வரை சிசிடிவி கேமரா பதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்தனர். இதில் சந்தேக நபர் ஒருவர் நெல்லை சந்திப்பில் ரயில் ஏறும்போது கையில் பேக் இல்லாமலும் தென்காசி ரயில்வே ஸ்டேஷனில் இறங்கும்போது கையில் பேக்வுடன் இறங்கி செல்வதும் தெரியவந்தது. இதனையடுத்து தென்காசி வழி நெடுகிலும் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ரயில்வே குற்ற தடுப்பு மற்றும் பாதுகாப்பு படை எஸ்.ஐ மனோகரன் தலைமையில்  ஏ.எஸ்.ஐ செல்வ கணேஷ், தலைமை காவலர்கள்  குஞ்சுமோன், ஆனந்த், முருகப்பெருமாள், காவலர்கள் ரமேஷ், பரமசிவம் ஆகியோர் அடங்கிய குழுவினர் தீவிர ஆய்வு மேற்கொண்டதில் கொள்ளையன் செங்கோட்டையை சேர்ந்தவன் என்பதை போலீசார் உறுதி செய்தனர். இதனையடுத்து போலீசார் செங்கோட்டை வம்பலந்தான் முக்கு  பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன்  கண்ணன் (54) என்பவரை கைது செய்து கொள்ளையடிக்கப்பட்ட 16 பவுன் நகைகளையும் முழுவதுமாக மீட்டனர். புகார் குறித்து அதிகாலையில் தகவல் அறிந்ததும் துரித நடவடிக்கை மேற்கொண்டு ஒரு வார காலமாக தென்காசி பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை சல்லடை போட்டு ஆராய்ந்து கொள்ளையனை மடக்கிப் பிடித்த தனிப்படையினருக்கு உயரதிகாரிகள் பாராட்டுகள் தெரிவித்தனர்.
 

 

Tags : சேரன்மகாதேவியில் வயதான தம்பதியிடமிருந்து ரயிலில் 16 பவுன் நகை கொள்ளை.ஒருவன் கைது.

Share via