மகளிர் விடுதி தீ விபத்தில் இருவர் உயிரிழப்பு – விடுதி உரிமையாளர் கைது!

by Editor / 12-09-2024 10:51:57am
மகளிர் விடுதி தீ விபத்தில் இருவர் உயிரிழப்பு – விடுதி உரிமையாளர் கைது!

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்ராபாளையம் தெருவில் தனியார் மகளிர் தங்கும் விடுதி செயல்படுகிறது. இவ்விடுதியில் 40க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி பணி மற்றும் கல்வி பயின்று வந்தனர். இந்த சூழலில், இன்று அதிகாலை 4.30 மணியளவில் விடுதியில் உள்ள பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில், விடுதி முழுவதும் கரும்புகை சூழந்தது.

இதனால், விடுதியில் தங்கி இருந்த சுமார் 5 பெண்களுக்கு லேசான காயங்களும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர். மேலும், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பின்னர் அங்கிருந்து மீட்கப்பட்ட பெண்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பரிமளா சௌந்தரி, சரண்யா ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இருவரும் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், விடுதியில் தங்கியிருந்த பெண்களை மாற்று இடத்தில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து, போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், விடுதியின் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

 

Tags : மகளிர் விடுதி தீ விபத்தில் இருவர் உயிரிழப்பு – விடுதி உரிமையாளர் கைது!

Share via

More stories