மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.

by Editor / 28-12-2024 11:38:29am
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) திடீர் உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் (டிச.26) மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்​துவ​மனை​யில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு காரணமாக மன்மோகன் சிங் நேற்று முன்தினம் இரவு 9.51 மணியளவில் காலமானார். மன்மோகன் சிங்கின் உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதையடுத்து, மன்மோகன் சிங்கின் உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேற்று அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில், மன்மோகன் சிங்கின் உடல் இன்று காலை 9 மணியளவில் அவரது வீட்டில் இருந்து காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து, காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலம் யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ள நிகம்போத் காட் பகுதியை அடைந்ததும், அங்கு ராணுவ மரியாதையுடன் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குகள் நடைபெறும். பின்னர் காலை 11.45 மணியளவில் மன்மோகன் சிங்கின் உடல் தகனம் செய்யப்படுகிறது.
 

 

Tags : மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.

Share via