இந்தியாவுடன் இறக்குமதி, ஏற்றுமதி இல்லை  தலிபான்கள் முடிவு 

by Editor / 19-08-2021 03:51:53pm
இந்தியாவுடன் இறக்குமதி, ஏற்றுமதி இல்லை  தலிபான்கள் முடிவு 



இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்டுவந்த இறக்குமதி, ஏற்றுமதிகளை தலிபான்கள் நிறுத்தி கொண்டுள்ளதால், உலர் பழங்கள் உள்ளிட்டவை விலை உயரும் வாய்ப்புள்ளது.


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை, தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து, இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்டுவந்த இறக்குமதி மற்றும் ஏற்றுமதிகளை தலிபான்கள் நிறுத்திக் கொண்டுள்ளனர். இதுகுறித்து இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு இயக்குநர் அஜய் சஹாய் கூறுகையில், “பாகிஸ்தான் வழியே மேற்கொள்ளப்பட்ட சரக்கு போக்குவரத்தை தலிபான்கள் நிறுத்தியுள்ளனர். இதன்மூலம், இந்தியாவிலிருந்து சென்ற இறக்குமதிகள் நிறுத்தப்பட்டுள்ளன.


ஆப்கானிஸ்தானில் நடைபெற்றுவருவதை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். அங்கிருந்து வரும் இறக்குமதிகள் பாகிஸ்தான் வழியே வந்தன. ஆனால், தற்போது பாகிஸ்தான் வழியே கொண்டு செல்லப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுடன் இந்தியாவுக்கு நீண்ட கால உறவு இருக்கிறது. வர்த்தகம் மற்றும் முதலீடுகள் ஆகியவற்றில் நல்ல உறவை பேணிவருகிறோம்.
சொல்லப்போனால், ஆப்கானிஸ்தானின் மிகப் பெரிய கூட்டு நாடு இந்தியாதான். 2021ஆம் ஆண்டை பொறுத்த வரை இந்தியாவிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு 835 அமெரிக்க டாலர்கள் மதிப்பில் ஏற்றுமதி நடைபெற்றுள்ளது.

510 அமெரிக்க டாலர்கள் மதிப்பில் இறக்குமதி நடைபெற்றுள்ளது. வர்த்தகத்தை தவிர, நல்ல அளவில் முதலீடு செய்துவருகிறோம். ஆப்கானிஸ்தானில் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவில் முதலீடு செய்துள்ளோம். கிட்டத்தட்ட 400 வளர்ச்சி பணித் திட்டங்களை மேற்கொண்டுள்ளோம். அது தற்போது வரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.


பெரும்பாலும் இந்தியாவிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு ஆடைகள், மருந்துகள், சர்க்கரை, காபி, வாசனைப் பொருட்கள் உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆப்கனிலிருந்து பெரும்பாலும் உலர் பழங்கள், பருப்பு வகைகள், வெங்காயம், தாதுக்கள் போன்றவை இறக்குமதியாகின்றன. இதன்மூலம் இந்த பொருள்களின் மீது விலை உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo