பள்ளி திறப்பும் பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்களும்..

தமிழகத்தில் கோடை விடுமுறைகள் முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. வெயில் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தற்போது இருக்கும் நிலையில் பள்ளிகள் மீண்டும் திறப்பது தள்ளிப்போகுமா அல்லது திட்டமிட்டப்படி ஜூன் 2ஆம் தேதி திறக்ப்படுமா என்பது தான் தற்போது பலரது கேள்வியாக இருந்து வருகிறது.
தென்மேற்கு பருவ மழை மற்றும் கோடை மழை காரணமாக தமிழகத்தில் தற்போது வெயில் தாக்கம் தணிந்துள்ளது. இதையடுத்து பள்ளிகள் திறப்பு குறித்த நேரத்தில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில், 2025-26ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு ஜூன் (02.06.2025) அன்று பள்ளிகள் திறக்கப்படுவதை பள்ளிக் கல்வித்துறை தற்போது உறுதி செய்துள்ளது. அந்தவகையில் கோடை விடுமுறை முடிந்து ஜுன் 2 ஆம் தேதி பள்ளிகளை திறப்பதற்கான அறிவுறுத்தல்களையும் பள்ளி கல்வித்துறை வழங்கியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் பள்ளி துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எனவே அறிவுரைகளை பின்பற்றி அனைத்து பள்ளிகளிலும் உரிய செயல்பாடுகள் மேற்கொண்டிட தேவையான நடவடிக்கைகளை உடன் எடுத்திடவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) தெரிவிக்கப்படுகிறது.
பள்ளிகள் திறப்பதற்கு முன் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள்: பள்ளித் தூய்மைப் பணிகள் பள்ளியிலுள்ள அனைத்து வகுப்பறைகள், தலைமை ஆசிரியர் அறை, ஆய்வகம், கழிப்பறைகள் உள்ளிட்ட பிற அறைகள் மற்றும் வளாகம் நன்கு தூய்மைபடுத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும். வகுப்பறைகள், தலைமை ஆசிரியர் அறை மற்றும் பிற அறைகளிலுள்ள தளவாடப் பொருட்கள், கதவு மற்றும் ஜன்னல்கள், கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் ஆகியவை நன்கு தூய்மைப்படுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்தல் வேண்டும். காலாவதியான ஆய்வகப் பொருட்களை முறைப்படி பதிவேட்டில் பதிவு செய்து நீக்கம் செய்திட வேண்டும்.பள்ளிக் கட்டடத்தின் மேற்பரப்பில் சேர்ந்துள்ள குப்பைகளை அகற்றி மழைநீர் வடிந்து ஓடுவதற்கான பாதை சரியாக உள்ளதா என்பதையும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு முறையாகச் சீர் செய்யப்பட்டுப் பயன்பாட்டில் இருப்பதையும் உறுதி செய்திடல் வேண்டும்.
மாணவர் பயன்பாட்டிற்கான குடிநீர்த் தொட்டி மற்றும் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி அனைத்தையும் உட்புறம் கிருமி நாசினி கொண்டு நன்கு சுத்தம் செய்து, தூய்மையாகவும் பாதுகாப்பான குடிநீர் மாணவர்களுக்குக் கிடைக்கும் வகையில் உள்ளதை உறுதி செய்திட வேண்டும்.
சமையலறை நன்கு சுத்தம் செய்யப்பட்டும் சமையல் பாத்திரங்கள் முறையாகக் கழுவப்பட்டும் பயன்படுத்துவதை உறுதி செய்திடல் வேண்டும். பள்ளி வளாகத்திலோ அல்லது வகுப்பறைகளிலோ தேவையற்ற பயன்பாடற்ற பொருட்கள் இருப்பின் அப்புறப்படுத்துதல் அவசியம். இவைகளை விதிகளின்படி ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளி வளாகத்தினை ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழி இல்லா வளாகமாக (Plastic Free School) மாற்றத்தக்க வகையில் செயல்பாடுகளைத் திட்டமிட்டு செயல்படுத்திட வேண்டும்.திறந்தவெளிக் கிணறுகள் இருப்பின் அதன் மேற்பரப்பினை யாரும் அணுகா வண்ணம் மூடிட நடவடிக்கை எடுப்பதுடன் பள்ளி தொடங்குவதற்கு முன்பாகவே இந்நடவடிக்கைகளை நிறைவு செய்யப்பட வேண்டும்.
கழிவுநீர்த் தொட்டிகள் மூடப்பட்டு பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி வளாகம் முழுவதும் குப்பைகளின்றித் தூய்மை செய்யப்படுவதை உறுதி செய்தல் வேண்டும். பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்தும் அனைத்து இடங்களும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.
பள்ளி வளாகத்தில் உள்ள அனைத்துக் குழந்தைகளும் பாதுகாப்பாகப் பயில தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும்.பள்ளி பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: பள்ளி வளாகத்தினுள் மாணவர்களின் முழுமையான பாதுகாப்பிற்குப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் முழுப் பொறுப்பு என்பதனை உணர்ந்து செயலாற்றிட வேண்டும்.
பள்ளித் தலைமையாசிரியர், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.பள்ளி வளாகத்தில் பழுதடைந்த கட்டடங்கள் அல்லது உடைந்து விழும் நிலையில் சுற்றுச் சுவர் ஏதேனும் இருப்பின், அத்தகைய கட்டடங்களை மாணவர்கள் அணுகாத வகையில் உரிய எடுக்கப்பட்டுள்ளதை உறுதி செய்திடல் வேண்டும்.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பயன்பாட்டில் உள்ள கழிவறைகளின் உள்ளேயும் வெளியேயும் கைகளை சுத்தம் செய்வதற்கு ஏற்றவகையில் போதுமான அளவில் சோப்பு / சோப்புக் கரைசல் வைக்கப்பட்டுப் பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.” உள்ளிட்ட பல முக்கிய அறிவுத்தல்களை பள்ளி கல்வித்துறை அறிவுத்தியுள்ளது.
Tags : பள்ளி திறப்பும் பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தல்களும்..